அரியலூர் மாவடடம் கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள்கோவில் தேரோட்டம்

கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள்கோவில் தேரோட்டத்தில் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று தேரை இழுத்து தரிசித்தனர்.

Update: 2022-04-18 06:48 GMT

கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப்பெருமாள் கோவில் தேரோட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்காண பக்தர்கள். தேரை வடம்பிடித்து இழுத்து பெருமாளை தரிசித்தனர்.

அரியலூர் அருகே உளள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் கோவில் ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் தங்களுடைய வயல்களில் பயிரிடப்படும் தானியங்கள் நோய்தாக்குதல் இல்லாமல் நன்கு விளைந்து நல்லமகசூல் கிடைக்க வேண்டியும், வேளாண்மைக்கு தேவையான கால்நடைகள் நோயின்றி வாழவும் இந்த கோவிலில் உள்ள தெய்வமான வரதராஜப்பெருமாளை வேண்டிக் கொண்டு, பின்னர் ஆண்டு திருவிழா அன்று தங்கள் வயலில் விளைந்த தானியங்களையும், ஆடு, மாடுகளை காணிக்கையாகவும் வழங்குவது வழக்கம்.

இக்கோவிலின் ஆண்டு திருவிழா ராமநவமி அன்று தொடங்கி 11 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டின் திருவிழா கடந்த 10ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் ஒவ்வொரு வாகனங்களில் வரதராஜபெருமாள் வீதியுலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9ம்நாள் முக்கியவிழாவான தோராட்டம் இன்று காலை நடைபெற்றது. வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் கோவில் ஆதீனபரம்பரை தர்மகர்த்தா ராமச்சந்திரன் தேரைவடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தார்.

முதல் தேரில் ஆஞ்சநேய சுவாமி முன்செல்ல, பெரியதேரில் வரதராஜப்பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவி சமேதரராக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்காண பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்றுகூறி தேரை வடம்பிடித்து இழுத்து பெருமாளை தரிசனம் செய்தனர். வானவேடிக்கைகளுடன் தேர் நான்குவீதிகளிலும் சுற்றிவந்து பின்னர் கோவிலை அடைந்தது.

நாளை இரவு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏகாந்த சேவை நடைபெறுகிறது. திருவிழாவிற்காக ஆத்தூர், சேலம், கடலூர், கும்பகோணம், தஞ்சாவூர், கல்லக்குறிச்சி, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து 100 சிறப்பு பேருந்துகள் போக்குவரத்துகழகம் மூலம் நேரிடையாகவும், அரியலூர் அண்ணாசிலையில் இருந்து கோவிலுக்கும் இயக்கப்பட்டன.

மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News