ஓட்டுக்காக இலவசங்கள்: மோசமடையும் மாநில நிதிநிலை - து.ஜனாதிபதி வெங்கைய்யநாயுடு

நாட்டின் துணை ஜனாதிபதியான வெங்கைய்யநாயுடு புதுடில்லியில் நடந்த செய்தி அதிகாரிகள் கூட்டத்தில் நேற்று பேசினார்.

Update: 2022-08-10 05:37 GMT

 இந்திய துணைஜனாதிபதி  வெங்கைய்யநாயுடு.

புதுடில்லி:

இந்தியாவின் துணைக்குடியரசுத்தலைவராக இதுநாள் வரை பதவி வகித்த வெங்கைய்யநாயுடுவின் பதவிக்காலமானது இன்றோடு முடிகிறது. டில்லியில் நடந்த செய்தி அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய துணைஜனாதிபதி வெங்கைய்யநாயுடு தேர்தல்நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகளை வழங்கும் கலாச்சாராத்தினால்தான் பல்வேறு மாநில அரசின் நிதி நிலைமையானது மோசமடைவதாக கருத்து தெரிவித்தார்.

கடந்த 6 ந்தேதி துணைக்குடியரசு தலைவருக்கான தேர்தலில் மேற்கு வங்கத்தின் முன்னாள் கவர்னர் ஜக்தீப் தங்கர் வெற்றி பெற்று நாளை பதவியேற்க உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாநிலங்களவையில் துணைஜனாதிபதி வெங்கைய்யநாயுடு விடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பாராட்டி பேசினார்.

இந்நிலையில் புதுடில்லியில் 2018-19 ம் ஆண்டின் பிரிவைச் சேர்ந்த இந்திய செய்தி தொடர்பு அதிகாரிகள் கூட்டத்தில் துணைக் குடியரசுத்தலைவர்வெங்கைய்யநாயுடு கலந்துகொண்டு பேசும்போது, செய்தி தொடர்பு அதிகாரிகள் அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாநில மொழியில் மக்களிடம் கொண்டு போய்சேர்க்க வேண்டும். அதேபோல் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டுவர திட்டம் வகுத்து பணியாற்ற வேண்டும். மேலும் செய்தி தொடர்பு அதிகாரிகள், பணியாளர்கள் என அனைவரும் மக்களுக்கும் அரசுக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும்.

சோஷியல் மீடியாக்கள் தற்போது அதிகரித்துள்ளதால் உடனடி இதழியல் என்ற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜனநாயகத்தின் 4வது துாண் ஊடகங்கள்தான். .எனவே நேர்மை, நடுநிலைமை, புறநிலை ஆகிய கொள்கைகளை கடைப்பிடித்தால்தான் ஜனநாயகமானது உயிருடன் இருக்க முடியும். 

இயற்கையை நாம் நேசித்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும். சாதாரண விவசாயி மகனாக பிறந்து நாட்டின் இரண்டாவது உயரிய பதவிக்கு தான் வந்ததற்கு எனது கடின உழைப்பே காரணம். மேலும் ஒரே மனநிலை கொண்ட அர்ப்பணிப்பு உணர்வு, தொடர்பயணம், பொதுமக்களுடன் உரையாடல் உள்ளிட்டவைகளே காரணம். நான் பொதுமக்களை சந்தித்து அவர்களுடன் பேசியதால்தான் நிறைய கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

மேலும், மாநில அரசுகள் தேர்தலில் வெல்வதற்காக இலவச அறிவிப்புகளை வெளியிடுவதால்தான் நாட்டில் இன்று பல மாநிலங்களின் நிதி நிலையானது மிகவும் மோசமடைந்து வருவதைக் காண முடிகிறது. இந்த கலாச்சாரம் தொடர்ந்தால் மாநில நிதி நிலைமையை சீரழித்துவிடும். உதவி தேவைப்படுவோர்களுக்கும், ஏழைகளுக்கும், அரசு நிச்சயம் உதவ வேண்டும். எந்தெவொரு அரசாக இருந்தாலும் சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை காரணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயலாற்ற வேண்டும் என அவர் பேசினார்

Tags:    

Similar News