ரிப்பேருக்கு போன செல்போன் : வங்கியில் இருந்து ரூ.2 லட்சம் அபேஸ்..! கவனமுங்கோ..!

செல்போனை ரிப்பேருக்கு கொடுத்த ஒருவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ. 2லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-10-25 07:16 GMT

செயலி மூலம் பணம் திருட்டு.

மும்பை, சகினாகா பகுதியைச் பங்கஜ் கதம் (40). இவர் தனது மொபைலை பழுது பார்ப்பதற்காக கடையின் ஊழியரிடம் கொடுத்திருந்தார். அந்த ஊழியர், பங்கஜ் கதம் வங்கி செயலிக்குள் நுழைந்து, அவரது நிலையான வைப்புத் தொகையில் இருந்து தொகையை மாற்றி பணம் திருடப்பட்டுள்ளதாக போலீசாரிடம் பங்கஜ் கூறினார். இது குறித்து சகினாகா போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

ஃப்ரீலான்ஸரான கதம், அக்டோபர் 7ம் தேதி அன்று அவரது போன் ஸ்பீக்கர் சரியாக வேலை செய்யாததால் ​​உள்ளூரில் உள்ள போன் பழுதுபார்க்கும் கடைக்குச் சென்றார். அங்கு பணியில் இருந்த ஊழியர் பங்கஜின் சிம் கார்டை போனுக்குள் வைக்கச் சொன்னார். உள்ளூர் என்பதால் சிம் கார்டுடன் போனை கொடுத்து, மறுநாள் மாலை  செல்போனை பழுது நீக்கி தாருங்கள் என்று பங்கஜ் ஊழியரிடம் கேட்டுக்கொண்டார்.

ஆனால், அக்டோபர் 8ம் தேதி மாலை கடைக்குச் சென்றபோது, ​​கடை மூடப்பட்டிருந்தது. அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளிலும் கடை மூடப்பட்டிருந்ததால் பங்கஜுக்கு சந்தேகம் வந்தது. அவரது வேலைக்காக அவருக்கு செல்போன் அவசியம் தேவை என்பதால் அவசரப்பட்டார்.

மீண்டும் அக்டோபர் 11ம் தேதி, கடை திறக்கப்பட்டது. ஆனால் போன் கொடுக்கப்பட்ட ஊழியருக்குப் பதிலாக மற்றொரு ஊழியர் கடையில் பணிபுரிந்தார். பங்கஜ்  அவரது செல்போன் மற்றும் சிம் கார்டைக் கேட்டார். ஆனால், புதிய ஊழியர் அவரிடம் அந்த ஊழியர் வரவில்லை என்று பங்கஜிடம் மன்னிப்புக் கேட்டார்.

ஏதோ தவறு நடந்திருப்பதை உணர்ந்த கதம், ஒரு நண்பரை அணுகி, அவருடைய வங்கிச் செயலியைப் பயன்படுத்தி அவரது வங்கிக்கணக்கில் இருப்பு விபரங்களை சரிபார்த்தார். பரிசீலித்த பங்கஜுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது நிலையான வைப்புத்தொகையில் இருந்து  ரூ.2.2 லட்சம் வரை பிரிக்கப்பட்டு, அந்தத் தொகை வேறொருவரின் கணக்கிற்கு மாற்றப்பட்டிருந்தது. அதிர்ச்சியில் பங்கஜ் உறைந்துபோனார். அக்டோபர் 14ம் தேதி, பங்கஜ்  சகினாகா காவல்துறையில் புகார் அளித்தார்.

போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தலைமறைவாக உள்ள செல்போன் கடை ஊழியரை தேடி வருகின்றனர். ஆகையால் செல்போன் ரிப்பேருக்கு கொடுத்தால் சிம் கார்டை கழட்டிவிட்டு கொடுங்கள். இல்லையேல் நாமும் பங்கஜை போல பணத்தை இழக்க நேரிடலாம். அதனால் உஷாரா இருங்க..

டிஜிட்டல் யுகம் பல நன்மைகளை ஏற்படுத்தியிருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஆனால் அதற்கேற்ப புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை திருடுவதும் அதிகரித்து வருகிறது. பங்கஜ் தனது வங்கி செயலியை பயன்படுத்த ரகசிய பாஸ்வேர்ட் வைத்திருந்திருப்பார். ஆனால் அதையும் கண்டுபிடித்து அவரது வைப்புத்தொகையை கண்டறிந்து பணத்தை வேறு ஒரு வங்கிக்கணக்குக்கு மாற்றியுள்ளனர்.

இதில் கவனிக்கப்படவேண்டியது, நிலையான வைப்புத்தொகையை உடைத்து அதில் இருந்து குறிப்பிட்ட தொகையை அபேஸ் செய்துள்ளனர். இதைப்போன்ற குற்றங்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பான வழிமுறைகளை கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தினால்,  இதைப்போன்ற இழப்புகளை தவிர்க்க முடியும். சாதாரண மக்களின் பணம் பாதுகாக்கப்படும்.

Tags:    

Similar News