தவறு செய்த புதுமுக நடிகரை, தட்டிக்கொடுத்து தைரியப்படுத்திய எம்.ஜி.ஆர்

படப்பிடிப்பில், வசன உச்சரிப்பில் தவறு செய்த புதுமுக நடிகரை எம்.ஜி.ஆர், தைரியப்படுத்தி நடிக்க வைத்த நிகழ்வு நடந்துள்ளது.

Update: 2022-12-09 02:04 GMT

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கு சக நடிகர்கள் யாரையும் மற்றவர்கள் கிண்டல் செய்வதோ, குறை கூறுவதோ பிடிக்காது. புதிய நடிகர்களை உற்சாகப் படுத்தி வாழ்த்துவார். இதனால் எம்.ஜி.ஆர்., படத்தில் நடிப்பது என்றால், அந்த காலத்து நடிகர்களுக்கு ஒரு பெரிய 'ஜாக்பாட்' அடித்தது போல் தான் இருக்கும். காரணம் எம்.ஜி.ஆர்., படப்பிடிப்பு தளத்தில் தான் என்ன சாப்பிடுகிறாரோ அதனையே தான் சக நடிகர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்து இருந்தார்.


எம்.ஜி.ஆர்., ஒரு அசைவ பிரியர் என்பது அத்தனை பேருக்கும் தெரியும். இதற்காக சாப்பாட்டு செலவை எல்லாம் தயாரிப்பாளர் தலையில் கட்டும் வழக்கம் எம்.ஜி.ஆருக்கு கிடையாது. பெரும்பாலும் சென்னையை சுற்றி உள்ள இடங்களில் படப்பிடிப்பு நடந்தால் சாப்பாடு எம்.ஜி.ஆர்., வீட்டில் இருந்தே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடும். அதுவும் ஜானகி ராமச்சந்திரனே சாப்பாடு சமைத்து எடுத்து வந்து விடுவார். அவர் கொண்டு வரும் சமையலில் முள் நீக்கப்பட்டு கருவாட்டினை துாளாக்கி வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி, அதனுடன் முட்டையும் சேர்த்து பொறித்து எடுத்து வருவாராம். இந்த உணவு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்குமாம். எவ்வளவு பிடித்த உணவாக இருந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் அத்தனை பேருக்கும் சப்ளை செய்த பின்னரே தானும் சாப்பிடுவாராம் எம்.ஜி.ஆர்., இது போன்ற பல நற்குணங்கள் நிறைந்து இருந்ததால் தான் எம்.ஜி.ஆர்., இன்று வரை பொன்மனச்செம்மலாகவே இருக்கிறார். அவரது தகவல்களை தேடித்தேடி படித்தால் அவ்வளவு சுவாராஸ்யமாக இருக்கும். இங்கு ஒரு புது தகவல் உண்டு.

வி.எஸ்.ராகவனும் எம்.ஜி.ஆரும் கலந்து கொண்ட ஒரு படப்பிடிப்பு. காட்சிப்படி மாடிப்படிகளில் இருந்து எம்.ஜி.ஆர். இறங்கி வரவேண்டும். அப்போது, வாசலில் வரும் தபால்காரர் 'சார் போஸ்ட்' என்று கூறி எம்.ஜி.ஆரிடம் தபாலைத் தர வேண்டும். தபால்காரர் வேடத்தில் நடித்தவர் புதுமுக நடிகர். 'சார் போஸ்ட்' என்ற இரண்டே வார்த்தைகள் தான் அவருக்கு வசனம். என்றாலும் அவர் பதட்டத்தில் இருந்தார். ''தம்பி, எம்.ஜி.ஆரு டன் நடிக்கிறே. ஜாக்கிரதை'' என்று இயக்குநர் ப.நீலகண்டன் வேறு எச்சரித்ததில் அவரது பதட்டம் அதிகரித்தது.

படப்பிடிப்பு தொடங்கியது. திட்டமிட்ட படி, எம்.ஜி.ஆர். புயலாக மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்தார். பதட்டத்தில் இருந்த தபால்காரராக நடித்த புதுமுக நடிகர், எம்.ஜி.ஆரைப் பார்த்து ''சார் போஸ்ட்'' என்று சொல்வதற்கு பதிலாக, ''சார் பேஸ்ட்'' என்று சொல்லி விட்டார். செட்டில் சிரிப்பலை எழுந்தது. அதை அடக்கியபடி ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல். ''நிறுத்துங்க. ஒரு நடிகர் தப்பு பண்ணிட்டா இப்படித்தான் சிரிக்கிறதா? நாம எல்லாம் தப்பே பண்ணலையா? யாரையும் கிண்டல் பண்ணாதீங்க'' என்று வெடித்தார். உடனே செட்டில் மயான அமைதி நிலவியது.


பின்னர், அந்த புதுமுக நடிகரை தனியே அழைத்துச் சென்ற எம்.ஜி.ஆர்., அவரது தோளில் கைபோட்டபடி, ''கவலைப்படாதீங்க. சரியா நடிங்க. உங்களால் முடியும்'' என்று உற்சாகப்படுத்தினார். அவர் கொடுத்த ஊக்கத்தில் அந்த நடிகர் சரியாக நடித்தார். ஷாட் ஓ.கே. ஆனது. உணர்ச்சிவசப்பட்டு காலில் விழுந்த நடிகரைத் தூக்கி வாழ்த்திய எம்.ஜி.ஆரின் பண்பைப் பார்த்து வி.எஸ். ராகவன் சிலிர்த்துப் போனார்.

Similar News