கேப்சூல் வடிவில் இனி விமானத்தில் பறக்க போகிறது நமது முருங்கை இலை

கேப்சூல் வடிவில் இனி விமானத்தில் பறக்க போகிறது நமது முருங்கை இலை
உலக முதலீட்டாளர் மாநாட்டில் செய்துள்ள ஒப்பந்தப்படி இனி கேப்சூல் வடிவில் விமானத்தில் பறக்க போகிறது நமது முருங்கை இலை.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் கரூர் மாவட்ட முருங்கை விவசாயிகள் வாழ்வில் ஒளி ஏற்றப்பட உள்ளது. முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. கடந்த 2022ல் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னின்று நடத்திய முருங்கை கண்காட்சி மூலம் இன்றைய முதலீட்டுக்கு விதை போடப்பட்டதாக கூறுகின்றனர் கரூர் மாவட்ட மக்கள்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொடி முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை, மூலனூர் முருங்கை என பல்வேறு வகை முருங்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விதை விதைத்தும், முருங்கைக் கன்று நட்டு வைத்தும் முருங்கை உற்பத்தி கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள், முருங்கை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு முருங்கை சாகுபடியே வாழ்வாதாரமாக விளங்குகிறது. கரூர் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும் முருங்கைக் கீரை, முருங்கைக்காய், முருங்கைப் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முருங்கைக்காய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் சீசன்களில் விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, கரூர் முருங்கை விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இருந்து முருங்கை இலையை பதப்படுத்தி கேப்சூல் வடிவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று கையெழுத்தாகியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கரூரில் சர்வதேச முருங்கை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த கண்காட்சி நடைபெறுவதற்கு காரணமாக இருந்தார். அவரே, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு அழுத்தம் கொடுத்து கரூரில் முருங்கை கண்காட்சி நடைபெறச் செய்தார்.

இந்த முருங்கை கண்காட்சியில் நூற்றுக்கணக்கான முருங்கை விவசாயிகளும், பிரேசில், ஜப்பான், கொரியா, ஸ்ரீலங்கா, மலேசியா, துபாய், லெபானன், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முனைவோர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சியின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோரிக்கையின்படி கரூரில் முருங்கை பார்க் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.

இந்நிலையில், தற்போது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக கரூர் மாவட்ட முருங்கை விவசாயிகள் பயன்பெற உள்ளனர். இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டு முருங்கை விவசாயிகளுக்கான மாநாடு, கருத்தரங்கம், கண்காட்சி நடத்திய செந்தில் பாலாஜி தற்போது சிறையில் இருக்கிறார். இந்நிலையில், அவருக்கும், தமிழக அரசுக்கும், தொழில் துறைக்கும் கரூர் மாவட்ட முருங்கை விவசாயிகள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

தண்ணீர் தேவை இன்றி வளரும் ஒரு மரம் என்றால் அது முருங்கை தான். இதன் காரணமாக வறண்ட தன்மை கொண்ட கொண்ட நிலத்தில் கூட முருங்கை சாகுபடி செய்ய முடியும். முருங்கை காய், முருங்கை இலை, முருங்கை பூ, முருங்கை பிஞ்சி என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதாகும். ஆனால் அதன் பலன்களை நமது மக்கள் இன்னும் முழுமையாக உணராமல் உள்ளனர். ஆனால் வெளிநாட்டில் இதற்கு மவுசு அதிகம் என்பதால் தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story