பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி சேலை: அமைச்சர் காந்தி தகவல்
பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில், ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் வழங்க இலவச வேட்டி சேலைகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரொக்கத்தொகை குறித்து அறிவிப்பு வெளியிடப்படாததால், பல்வேறு தரப்பில் இருந்து பரிசுத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.
மேலும், ஆண்டு தோறும் தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டும் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ரேஷன் கடைகளில் வழங்க உள்ள வேட்டி, சேலை, கரும்பு ஒதுக்கீடு பணிகள் தொடங்கப்பட உள்ளன.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காந்தி, "தமிழர் திருநாளை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் இலவச வேட்டி, சேலைகள் இந்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். அதற்காக 1.68 கோடி லட்சம் சேலைகள், 1.63 கோடி லட்சம் வேட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அளிக்கப்படும் சேலைகளில் 15 ரகங்களும் வேட்டிகளில் 5 ரகங்களும் இடம் பிடித்துள்ளன" எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu