கோவையில் நாம் தமிழர் கட்சியினர் தாக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம்

கோவையில் நாம் தமிழர் கட்சியினர் தாக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம்

சீமான்.

கோவையில் நாம் தமிழர் கட்சியினர் தாக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவையில் நாம் தமிழர் கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியினரால் தாக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை அடித்து உதைத்த பா.ஜ.க.வினரின் செயலைக் கண்டித்துள்ள சீமான், இதுபோன்ற சம்பவங்களை தி.மு.க. அரசு வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியினர் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச்சேர்ந்த உயிருக்கினிய தம்பிகள் ஆஷிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று (13.01.2024) இரவு நீலிகோணம்பாளையம் பகுதியில் தமிழர் திருநாள் வாழ்த்துச் சுவரொட்டிகள் ஒட்டச் சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க.வினர் சிலர், தம்பிகள் இருவர் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளச் செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

சாதி, மதங்களைக் கடந்து தமிழிளந் தலைமுறை பிள்ளைகள் தமிழர்களாக ஒன்றுபட்டு பெருமளவில் நாம் தமிழர் கட்சியில் இணைந்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாததே பா.ஜ.க.வினர் செய்துள்ள இந்தக் கோழைத்தனமான கொலைவெறித் தாக்குதலுக்குக் காரணமாகும். தமிழர் ஓர்மையைச் சீர்குலைத்து, மதக்கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபமடையத் துடிக்கும் பாஜகவின் இழிவானச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட மதவெறி அமைப்புகளின் வன்முறைச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தி.மு.க. அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது. இதுதான் தமிழ்நாட்டில் பா.ஜ.க. வரவிடாமல் தடுக்கும் திராவிட மாடல் அரசின் செயல்முறையா?

உண்மையில் இந்துத்துவ அமைப்புகளுக்கு தி.மு.க. அரசு தரும் மறைமுக ஆதரவே மாற்றுக்கட்சியினரைத் தாக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர முக்கியக் காரணமாகும். ஆகவே, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பிகள் ஆஷிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவர் மீதும் கொலைவெறித்தாக்குதல் நடத்திய பா.ஜ.க.வினரை உடனடியாக கைது செய்து சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் குறிப்பிட்டு உள்ளார்.

Tags

Next Story