10 ஆண்டு சிறப்பான ஆட்சி: மோடிக்கு பன்னீர் செல்வம் திடீர் சர்ட்டிபிகேட்

10 ஆண்டு சிறப்பான ஆட்சி: மோடிக்கு பன்னீர் செல்வம் திடீர் சர்ட்டிபிகேட்

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், பிரதமர் மோடி.

பிரதமர் மோடி 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி நடத்தி இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் திடீர் சர்ட்டிபிகேட் வழங்கி உள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க. சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறது என பிரதமர் மோடிக்கு ஓ .பன்னீர் செல்வம் திடீர் என சான்றிதழ் அளித்து உள்ளார்.

சென்னையில், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி இன்று நடத்திய அதேநேரத்தில், கோவையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். லோக்சபா தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அதன்படி கோவையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார் ஓபிஎஸ்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், "பொதுக்குழு வழக்கு வரும் ஜனவரி 19 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கில் பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக தெளிவான முடிவுகள் கிடைக்கும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

என் மீது அவர்கள் என்ன குற்றச்சாட்டை சொல்கிறார்கள்? என்னை கட்சியை விட்டு நீக்குவதற்கு அவர்கள் என்ன காரணம் சொல்கிறார்கள்? நான் யாருக்கு நம்பிக்கை துரோகம் செய்தேன் என்பதை அவர்களால் சொல்ல முடியுமா? இப்போதும் நான் அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்கிறேன். நாம் ஒன்றுபட்டால்தான் வெற்றி அடையமுடியும். புரிய வேண்டியவர்களுக்கு இது புரியும். ஆனால் அதை காதில் வாங்க மறுக்கின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் எங்களின் நிலைப்பாட்டை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க. சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறது. எனவே மீண்டும் நரேந்திர மோடி தான் பிரதமராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். மோடி மீண்டும் பிரதமர் ஆனால் இந்தியா சுபிட்சமாக நன்றாக இருக்கும். பாஜகவுடன் உறவு சுமூகமாக உள்ளது" எனக் கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

பாரதிய ஜனதாவை பொறுத்தவரை ஓ. பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டி விட்டு எடப்பாடி பழனிசாமிக்கு தான் முழு ஆதரவு அளித்து வந்தது. இந்த நிலையில் தான் அண்ணாமலை பேசியதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு கூட்டணியில் இருந்து பாரதிய ஜனதாவை கழற்றிவிட்டது அ.தி.மு.க. ஆனால் இப்போது ஓ.பி.எஸ். அளித்துள்ள இந்த திடீர் சான்றிதழ் அவர் பாரதிய ஜனதா பக்கம் நெருங்குவதை உறுதிப்படுத்தி உள்ளது.

Tags

Next Story