மத்திய பிரதேச மாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழக லாரி டிரைவர்கள்

மத்திய பிரதேச மாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழக லாரி டிரைவர்கள்
மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்து வரும் ஓட்டுனர்களின் போராட்டத்தில் சிக்கி தமிழக லாரி டிரைவர்கள் தவித்து வருகிறார்கள்.

கிரிமினல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவில் உள்ள சில பிரிவுகளை எதிர்த்து வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் வட மாநிலங்களில் சிக்கி கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் பெரும் சலசலப்புகளுடன் முடிந்தது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் சஸ்பெண்ட் ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம், இந்திய தண்டனைச் சட்டம் திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டன. அதாவது, இந்திய தண்டனை சட்டம் என்பது ஆங்கிலேயர் கால சட்டம் என்று கூறி இதனை மாற்ற மசோதா ஒன்றை மத்திய அரசு முன்மொழிந்தது. இது வாக்கெடுப்புக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, இந்திய தண்டனை சட்டம் என்பது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் 'பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா' எனவும், இந்திய சாட்சிய சட்டம் 'பாரதிய சாக்சியா' எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. ஆனால், இதில் சில திருத்தங்களையும் அரசு மேற்கொண்டது. அதன்படி, கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை, ஹிட் அண்ட் ரன் என்று சொல்லப்படும், சாலை விபத்துகளுக்கு அதிகபட்சமாக ரூ.7 லட்சம் அபராதத்துடன் கூடிய 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சட்டம் திருத்தப்பட்டது.

இதுதான் தற்போது பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. ஏனெனில் இதற்கு முன்னர் இந்த வழக்கில் சிக்கினால் 2 வருட சிறை தண்டனைதான் இருந்தது. எனவே இந்த சட்ட திருத்தங்களை எதிர்த்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த லாரி ஓட்டுநர் சங்கத்தினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் வட மாநிலங்களில் பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. கேஸ் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தால் முக்கிய சாலைகள் முடங்கியுள்ளன. போராடும் லாரி டிரைவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்திய நிலையில், டிரைவர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம், மக்கள் பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். வாகனங்கள் தவிர கேன்களிலும், பெட்ரோல், டீசல்களை நிரப்பி செல்கின்றனர்.

இந்த போராட்டம் காரணமாக வடமாநிலங்களில் ஊர் பெயர் தெரியாத இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த லாரி டிரைவர்கள் சிக்கி தவிக்கின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகின்றன.

வீடியோவில் தமிழ்நாட்டை சேர்ந்த டிரைவர்கள் பேசியிருப்பதாவது, "மத்தியப் பிரதேசத்தில் நாங்கள் நின்றுக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு முன்பு 50 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் நிற்கின்றன, பின்னே 50 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் நிற்கின்றன.இதை மீறி எதிர் சாலையில் ஏறி சென்றால், கண்ணாடிகளை அடித்து உடைக்கிறார்கள். நாங்கள் நடுக்காட்டில் சிக்கியிருக்கிறோம். இங்கு எந்த கடைகளும் கிடையாது, உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறோம். விபத்து ஏற்படுத்தினால் லட்சக்கணக்கில் அபராதம் கட்ட வேண்டும் என்று புதிய சட்டம் சொல்கிறது. லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்தால் நாங்கள் ஏன் லாரி ஓட்ட வருகிறோம்?

குடும்ப கஷ்டத்தினால்தான் நாங்கள் லாரிக்கு வருகிறோம். லட்சக்கணக்கில் அபராதம் செலுத்துவது மட்டுமல்லாது 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. 10 ஆண்டுகள் சிறை எனில், எங்கள் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள். எதிர்பாராமல் நடப்பதால்தான் அதை விபத்து என்று சொல்கிறோம். இப்படி எதிர்பாராமல் நடக்கும் விபத்துகளுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags

Next Story