லியோ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்தக்கோரி வழக்கு

லியோ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்தக்கோரி வழக்கு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

லியோ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்தக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் கலாச்சாரமும், மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி முரண்பாடான கருத்துகளையும், போதை பொருள் பயன்பாடு, பெண்கள் குழந்தைகளைகொல்ல வேண்டும் என்ற கருத்தை விதித்தல் உள்ளிட்ட காட்சிகளை லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் காட்சிப்படுத்தி உள்ளார்.

இதுமட்டுமின்றி கலவரம், சட்டவிரோத செயல்கள், போதை பொருள் வியாபாரம், துப்பாக்கிகளை பயன்படுத்துதல், காவல்துறை உதவி உடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் என்ற சமூகவிரோத கருத்துகளை 'லியோ' படத்தில் காட்சிப்படுத்தி உள்ளார். இது போன்ற படங்களை தணிக்கை குழு முறையாக ஆய்வு செய்ய வேண்டும். லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜூக்கு முறையாக உளவியல் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

மேலும் இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்படி வழக்குப்பதிவு செய்து 'லியோ'படத்தை முழுமையாக தடை விதிக்க வேண்டும் என கோரி இருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. லோகேஷ் கனகராஜ் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Tags

Next Story