சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்பு

கணவர் மற்றும் குழந்தைகளுடன் மீட்கப்பட்ட நடிகை நமீதா.
சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா அவரது கணவருடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளக்காடானது. புறநகர் பகுதிகள் குறிப்பாக ஆவடி, பள்ளிக்கரணை, பெருங்குடி, மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் வரலாறு காணாத வகையில் 73 சென்டிமீட்டர் மழை பெய்ததால் அந்த பகுதியில் பாதிப்புகள் மிக அதிகமானது.
அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் முதல் மாடி மற்றும் இரண்டாவது மாடியில் ஏறி தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். மாடி வீடு இல்லாதவர்கள் படகு மூலம் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ராணுவத்தினரால் மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைத்துள்ளனர். மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளிக்கரணை அருகே நாராயணபுரம் ஏரி உடைந்ததால் சென்னை துரைப்பாக்கம் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
துரைப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நடிகை நமீதா வீட்டிற்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் அவர் தனது கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் சிக்கிக்கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்ததும் துரைப்பாக்கம் பகுதி தி.மு.க. நிர்வாகி ஒருவர் படகில் சென்று நமீதாவையும் அவரது குழந்தைகளையும் கணவரையும் காப்பாற்றி கரை சேர்த்து உள்ளார். நமீதாவுடன் சேர்த்து மேலும் 200 நபர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu