நாமும் எதிர்கால சந்ததியினரும் நாட்டுப்பற்றுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் பேச்சு

ஆங்கிலேயர்களுடன் ஒத்துப்போயிருந்தால் ராவ்பகதூர் போன்ற பட்டங்களை பெற்று வஉசி மேலும் வசதியாக வாழ்ந்து இருக்கலாம்

Update: 2021-09-20 07:45 GMT

விருதுநகரிவ் நடந்த வஉசி விழாவில் பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன்.

நாடு முன்னேற நாமும், எதிர்கால சந்ததியினரும் நாட்டுப்பற்றுடன் இருக்க வேண்டும் என்றார் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்.

விருதுநகரில் வெள்ளாளர் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் வ.உ.சி.யின் 150-ஆவது பிறந்த நாள் விழாவும், அவருக்கு பெருமை சேர்த்த முதலமைச்சருக்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்டு, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது: நாம் இங்கு சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் அமர்ந்து இருக்க காரணம் தியாகச் செம்மல் வ.உ.சி. போன்றவர்கள் செய்த தியாகம் தான். வ.உ.சி. வசதியுடன் வாழ்ந்தவர். அவர் வெள்ளை ஏகாதிபத்தியத்துடன் ஒத்துப்போயிருந்தால் ராவ்பகதூர் போன்ற பட்டங்களை பெற்று மேலும் வசதியாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால், அவர் நாடு விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கையுடன் வெள்ளை ஏகாதிபத்தியத்தினரை எதிர்த்து நின்றதால் தான் சொத்துகளை இழந்தார்.

தனது இறுதி நாட்களில் அவர் அனைத்து வசதிகளையும் இழந்து மிகவும் சிரமத்திற்குள் ளானார்.  வ.உ.சி. தேசப்பற்றும், தியாக உணர்வும் ஈடு இணை இல்லாதது ஆகும். எனவே, நாடு முன்னேற, மாநிலம் முன்னேற, நாமும் எதிர்கால சந்ததியினரும் வ.உ.சி.யைப்போல் தேசப்பற்றுடன் விளங்க வேண்டும். கடந்த தேர்தலின் போது வெள்ளாள சமுதாயத்தினர் எங்களுக்கு வாக்களித்ததால் தான் நாங்கள் பெருவாரியாக வெற்றி பெற்றோம்.நீங்கள் கோரிக்கைகளை கேட்க உரிமை இருக்கிறது. அதை நிச்சயம் நிறைவேற்றி தருவோம் என்றார் அமைச்சர் ராமச்சந்திரன்.  விழாவில் எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், சிவகாசி அசோகன், வ.உ.சி.யின் பேத்தி செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News