தியாகி சங்கரலிங்கனார் 65வது நினைவு தினம்: பல்வேறு அமைப்பினர் மலர் தூவி மரியாதை
விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் 65வது நினைவுதினம் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
தமிழ்நாடு என பெயர் வர உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபம் விருதுநகரில் உள்ளது. விருதுநகர் கல்லூரி சாலையில் உள்ள மணிமண்டபத்தில் பல்வேறு அமைப்பினர், இயக்கத்தினர் தியாகி சங்கரலிங்கனார் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாடார் மஹாஜனம் சார்பில் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து விருதுநகர் சுமை பணியாளர்கள் சங்கத்தினர் திருஉருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
மேலும் நாடார் மஹாஜனம் சார்பில் மணி மண்டபத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் ஏராளமான பொதுமக்கள் அவரின் தியாகத்தை நினைவு கூர்ந்து பேசினர்.