திருவண்ணாமலையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவண்ணாமலை மாவட்ட கிளை சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில பொருளாளர் ஜோதிபாபு, மாவட்ட பொருளாளர் வெங்கடபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அந்தோணிராஜ் வரவேற்றார்.
17-பி ரத்து செய்யப்பட்ட போளூர், கலசபாக்கம், வந்தவாசி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பகலில் 70-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களிடம் அலுவலர்கள் யாரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடாததால் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் நேற்று இரவு சாப்பாடு வாங்கி வந்து அங்கேயே சாப்பிட்டு தொடர்ந்து , இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.