திருவண்ணாமலையில் தகராறில் ஈடுபட்ட மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை

திருவண்ணாமலையில் தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு போலீசார் அறிவுரை கூறினார்கள்.

Update: 2022-07-28 07:07 GMT

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு  போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.

திருவண்ணாமலை செங்கம் சாலையில் சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படித்து வரும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக இரு வெவ்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 25-ந் தேதி மாலையில் பள்ளி முடிந்த பின்பு இரு தரப்பை சேர்ந்த மாணவர்கள் பள்ளியின் நுழைவாயில் முன்பு மோதலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த நிலையில்  அப்பள்ளியில் தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை அழைத்து காவல்துறை மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்- இன்ஸ்பெக்டர் ராஜீவ் காந்தி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் மாணவர்களிடமும், அவரது பெற்றோர்களிடமும் அறிவுரை வழங்கி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

அப்போது  பள்ளி வகுப்பறையில் எந்தவித பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக அது குறித்து ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து தகராறில் ஈடுபடுவது தவறு. படிக்கும் காலத்தில் மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் செயல்பாடுகளை அவர்களது பெற்றோர்களும் கவனிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News