சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுசிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-07-01 06:04 GMT

திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம் நடுத்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 24). இவர் கடந்த 2019-ம் ஆண்டு 8 வயது சிறுமி ஒருவரை கடத்தி சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போக்சோ வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.  அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.

அதில் குற்றம் சாட்டப்பட்ட அய்யப்பன் சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம், போக்சோ பிரிவின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளதால் அய்யப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் மூலம் இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்க நீதிபதி பரிந்துரை செய்தார்.

Tags:    

Similar News