சொத்தை மீட்டு தரக்கோரி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீர்வு நாள் கூட்டத்தில் சொத்தை மீட்டு தரக்கோரி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

Update: 2022-04-12 01:21 GMT

குறைதீர்வு நாள் கூட்டத்தில் சொத்தை மீட்டு தரக்கோரி  குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற வெங்கடேசன்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்  நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்துவதால் குறைந்த அளவிலான மக்களே மனு அளிக்க வந்தனர். இதில் பல்வேறு உதவித்தொகை, சாதி சான்று, வீட்டுமனை பட்டா, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். மேலும் கடந்த கூட்டங்களில் பெற்ற மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

செங்கம் தாலுகா முன்னூர்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், தொழிலாளி. அவரது மனைவி ராஜகுமாரி மற்றும் 5 வயது மகள் விவேகாவுடன் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு திடீரென அவர் மறைத்து வைத்து இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தன் மீதும், மனைவி, மகள் மீதும் ஊற்றினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது வெங்கடேசன் கூறுகையில், செங்கம் தோக்கவாடியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1½ லட்சத்தை அவசர தேவைக்காக சொத்தை அடமானமாக எழுதி கொடுத்து வாங்கியதாவும், 14 மாதத்திற்குள் ரூ.2 லட்சத்தை அந்த நபரிடம் திருப்பி கொடுத்து, சொத்தை திருப்பி தனது பெயரில் எழுதி கொடு என்று கேட்டால் காலதாமதம் செய்து வருவதாக கூறினார். மேலும் அவரது தூண்டுதலின் பேரில் சிலர் சொத்தை அபகரிக்கும் நோக்கில் அவருக்கும்  மனைவி, குழந்தைக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறினார்.   

இதையடுத்து போலீசார் அவர்களை அதிகாரிகளிடம் மனு அளிக்க குறைதீர்வு கூட்டத்திற்கு அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News