கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்வு கூட்டம்

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-31 11:44 GMT

கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்வு கூட்டம் மண்டல இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மண்டலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்வு கூட்டம்  திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் உள்ள யாத்ரி நிவாஸ் கூட்டரங்களில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பணியாளர்கள் பேசினர். மேலும் அவர்கள் மனுக்களும் வழங்கினர்.

தொடர்ந்து இணை ஆணையர், பணியாளர்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு கண்டு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தார். மேலும் அவர் பேசுகையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் நிலங்கள் ஆக்கிரமிப்புகள் அரசு சார்பில் அகற்றப்பட்டு வருகிறது.

கோவில் பணியாளர்கள் கோவிலின் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதா என்று கண்டறிந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும் என்றார். தொடர்ந்து கூட்டத்தில் பணிபதிவேடு பராமரிக்கப்படும் விவரம், பணியாளர் சம்பளப்பட்டியல் அங்கீகரிப்பட்டு உள்ள விவரம், 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள விவரம், காலிப்பணியிடங்கள் நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

Similar News