கல்வி விடுதிகளில் பகுதி நேர தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்,

Update: 2022-05-16 01:26 GMT

 மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர தூய்மைப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ஆண்கள் 11 பேரும், பெண்கள் 12 பேரும், மாதம் ரூ.3000 தொகுப்பூதிய அடிப்படையில் நேர்காணல் மூலம் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விடுதிகளில் பகுதிநேர தூய்மைப் பணியாளர் பணி புரிய விருப்பம் உள்ளவர்கள் திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உரிய விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளின் நகல்கள் இணைத்து சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை ஒட்டி, அதை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தில் வருகிற 30-ந்தேதி மாலை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது. மேற்கண்ட தகவலை திருவண்ணாமலை மாவட்ட மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News