திருவண்ணாமலையில் இருசக்கர வாகன ஷோரூம் பூட்டை உடைத்து திருட முயற்சி

திருவண்ணாமலையில் இருசக்கர வாகன ஷோரூம் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது.

Update: 2022-07-22 07:25 GMT

திருவண்ணாமலை காஞ்சி சாலையில் இருசக்கர வாகன ஷோரூம் உள்ளது. இங்கு நேற்று இரவு வியாபாரம் முடிந்த பின்னர் ஊழியர்கள் ஷோரூமை பூட்டி விட்டு சென்றனர். ஊழியர்கள் இன்று காலை வந்து பார்த்த போது ஷோரூமின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்த்தி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்களால் அங்கு பணம் வைக்கப்படும் லாக்கரை உடைத்து திறக்க முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. ஆனால் அங்கிருந்து பணம் திருட்டு போகவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு சோதனை செய்தனர். அதில் நள்ளிரவு 12.30 மணியளவில் 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் ஷோரூம் அருகே வருவதும், பின்னர் கடையின் பூட்டை உடைத்து திறப்பது, கடைக்குள் சென்று லாக்கரை திறக்க முயற்சிப்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. தொடர்ந்து போலீசார் அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News