4 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 66 வயது முதியவருக்கு சிறை

சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2023-03-30 02:31 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா பன்னிரண்டு புத்தூர் காலனி பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 66), கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2020-ம் ஆண்டில் 4 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஆரணி மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பூபாலனை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட பூபாலனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். பின்னர் பூபாலனை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

சித்தப்பாவை தாக்கிய ராணுவ வீரர் கைது

ஆரணி அருேக சித்தப்பாவை தாக்கிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சீனிவாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரத்தினம்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. அவரது சகோதரர் கோவிந்தராஜ். இவரது மகன் ஜெயசூர்யா (வயது 24), ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நிலம் தொடர்பாக அண்ணன்-தம்பிக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்த ஜெயசூர்யா பிரச்சினைக்குரிய இடத்துக்கு சென்று அங்கு இருந்த காணிக்கல்லை பிடுங்கியுள்ளார். தகவல் அறிந்து சக்கரவர்த்தி அங்கு சென்று ஜெயசூர்யாவிடம் ஏன் கல்லை பிடுங்கி போட்டாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த ஜெயசூர்யா, சித்தப்பா சக்கரவர்த்தியை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயசூர்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News