முறைகேடாக பட்டா மாற்றம் : கிராம உதவியாளர் பணியிட நீக்கம்..!

அரசு புறம்போக்கு நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்த கிராம உதவியாளர் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-11-04 09:15 GMT

கிராம உதவியாளர் முனிவேல்.

திருவள்ளூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்த சீயஞ்சேரி கிராம உதவியாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த 82பனப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சீயஞ்சேரி கிராம உள்ளது.

இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கிராமத்தின் உதவியாளராக பணியாற்றி வந்தவர் முனிவேல் (வயது51) ஆவார். இவர் பெரியபாளையம் அடுத்துள்ள ஏனம்பாக்கம் கிராமம்,பளையக்கார தெருவில் வசித்து வருகிறார்.

இவர் ஏனம்பாக்கத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை முறைகேடாக தனது உறவினர்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ததாகவும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும்,அரசு அனுமதி இன்றி பல கோடி ரூபாய் மதிப்பில் வீடு கட்டி வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாலதி விசாரணை மேற்கொண்டதில் குற்றச்சாட்டு உண்மை என தெரிய வந்ததாம். இதனால் கிராம உதவியாளர் முனிவேலை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரின் உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டை தாசில்தார் ராஜ்குமார் நேற்று  பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

Tags:    

Similar News