40 தொகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டும் : திருமாவளவன் பேச்சு..!

திருவள்ளூர் அருகே மாம்பாக்கம் கிராமத்தில் மாநில நிர்வாகியின் தாயார் உருவப்படம் திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வி.சி. தலைவர் திருமாவளவன் தலைமையில் நடந்தது.

Update: 2023-11-14 03:45 GMT

இதுவரை விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல் திருமாவளவன்  வலியுறுத்தினார்.

திருவள்ளூர் அருகே மாம்பாக்கம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அரசியல் குழுச் செயலாளர் நீலவானத்து நிலவனின் தாயார் உருவப்படம் திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான  தொல் திருமாவளவன் கலந்து கொண்டு நீல வானத்து நிலவனின் தாயார் கண்ணம்மாள் சபாபதி உருவ படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.

அவர் பேசும்போது,

திருச்சியில் வரும் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும் வெல்லும் ஜனநாயகம் மாநாடு இந்திய அரசியல் கட்சியினர் அனைவரும் உற்று நோக்கும் மாநாடாக அமையும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யும் பிஜேபி ஆர் எஸ் எஸ் கொள்கையை நாம் எதிர்க்கிறோம். பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சனாதனம் வலுப்பெறும். ஜாதியை கட்டமைப்பு வலுப்பெறும் பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகள் தீவிரமடையும் சமூக நீதியை குழி தோண்டி புதைத்து விடுவார்கள். விளிம்பு நிலை மக்கள் ஜாதியின் பெயரால் மாதத்தின் பெயரால் மோதிக் கொல்லும் நிலை ஏற்படும்.

புரட்சியாளர் அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு கனவு தகர்ந்து போகும். தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் ஓபிசி அரசியல் தலைவர்கள் பிஜேபியை எதிர்க்கிற அரசியலை பேசவில்லை. தமிழகத்தில் மட்டும்தான் பேசுகிறார்கள். அதற்குக் காரணம் பெரியார் வகுத்து தந்த பாதை.சனாதனம் ஒழிப்பு குறித்து நாம் தேசிய தலைவர்களிலேயே பேசி வருகிறோம். அவர்களும் இதை புரிந்து கொண்டு எதிர்க்க தயாராகி வருகின்றனர்.

இந்த ஒருமித்த கருத்தில் உருவானது தான் இந்தியா கூட்டணி. இந்தியா கூட்டணி தமிழகத்தில் 40க்கு 40 என வெற்றி பெற வேண்டும். வெல்லும் ஜனநாயகம் என்ற மாநாடு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் மாநாடு அமைய வேண்டும் என்பது மட்டும் நமது நோக்கம் அல்ல. சனாதன சக்திகளை தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறச் செய்யக்கூடாது என்பது நமது நோக்கம்.

இவர்கள் ஆட்சிக்கு வந்த இந்த 10 ஆண்டுகாலத்தில் ஏராளமான தேவாலயங்கள் மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன. ஜாதி, மத ரீதியாக மக்கள்  பிளவுபடுத்தப்படுகின்றனர். எஸ்சி எஸ்டி ஓ பி சி போன்ற அனைவரும் இணைந்து வாழக்கூடிய தருணமாக வரும் வேளையில் இவர்கள் அனைத்தையும் சிதைத்து விட முயற்சித்து வருகின்றனர் என்றார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், துணை பொதுச்செயலாளர் ரஜினிகாந்த், ராணிப்பேட்டை திருவள்ளூர் மண்டல செயலாளர் மூ.வ. சித்தார்த்தன், மத்திய மாவட்ட செயலாளர் மாஸ்டர் அருண்கவுதம், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அசோக் நிலவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News