திருப்பூரில் சாய ஆலைகளில் விதி மீறல்; மின் இணைப்பு துண்டிப்பு

திருப்பூரில் விதிகளை மீறிய சாய ஆலை, பிரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்புகளை துண்டித்து, அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2022-12-18 08:18 GMT

திருப்பூரில் விதிமீறிய தொழிற்சாலைகளில், மின் இணைப்பு துண்டிப்பு. ( கோப்பு படம்).

திருப்பூர் பனியன் தொழிலை மையமாக கொண்டுள்ளது; திருப்பூர் வாழ் மக்கள் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக, திருப்பூர் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு தேடி வரும் தமிழக தொழில் நகரங்களில் முக்கிய நகரமாகவும் திருப்பூர் விளங்குகிறது.

இந்நிலையில், தொழிற்சாலைகளில் பனியன் உற்பத்தி மற்றும் அதுசார்ந்த தொழில்களை விதிமுறைகளை பின்பற்றி நடத்த தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, சாய ஆலை தொழிற்சாலைகளில் இருந்து, சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை திறந்த வெளியிலோ அல்லது, நீர்நிலைகளிலோ கலந்துவிடக்கூடாது என, தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, சாயக்கழிவுநீரால், திருப்பூரில் நொய்யலாறு பாழ்பட்ட நிலையில், இந்த விதிமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் திருப்பூரில் சில இடங்களில் விதிமீறல் தொடர்வதால், அவ்வப்போது அதிகாரிகள், மக்கள் தரும் புகார்களின் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தி, அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

அந்த வகையில், திருப்பூரில் விதிமீறலில் ஈடுபட்ட சாய ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனத்தின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமல்,  விதிமீறல் சாய ஆலை, பிரிண்டிங் நிறுவனங்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

நகர பகுதிகளில் குடோன், வீடுகளை வாடகைக்கு பிடித்து சாய ஆலை, பிரிண்டிங் நிறுவனங்களை இயக்குகின்றனர்.சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை அருகில் செல்லும் சாக்கடை கால்வாய், நீர் நிலைகளில் திறந்து விடுகின்றனர். இதை ஆய்வு செய்ய மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் (வடக்கு) சரவணகுமார், பறக்கும்படை பொறியாளர் பழனிசாமி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பாரதிராஜா உட்பட அதிகாரிகள் குழுவினர், பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் விதிமீறல் நிறுவனங்கள் குறித்து ஆய்வு நடத்தினர்.

இதில் சாமுண்டிபுரத்தில் அருகருகே இயங்கிய இரண்டு பிரின்டிங் நிறுவனங்கள் சிக்கின. டேபிள் பிரின்டிங் எந்திரங்களை நிறுவியுள்ள இந்நிறுவனங்கள் மாசுகட்டுப்பாடு வாரியத்தில் அனுமதி பெறவில்லை.சுத்திகரிக்காத பிரின்டிங் கழிவுநீரை அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் திறந்துவிட்டுள்ளன.

அதேபோல் கொங்கு மெயின் ரோடு, திருநீலகண்டபுரத்தில் அனுமதி பெறாமல் இயங்கிய சாய ஆலையும் பிடிபட்டது. எந்த அனுமதியும் பெறாத இந்த ஆலை 5 கிலோ கொள்ளளவுள்ள விஞ்ச் எந்திரத்தை நிறுவி, துணிக்கு சாயமேற்றியதோடு சாயக்கழிவுநீரை விதிமீறி வெளியே திறந்துவிட்டதும் தெரியவந்தது.

அனுமதி பெறாமல் இயங்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்திய 2 பிரின்டிங், ஒரு சாய ஆலையின் மின் இணைப்பு துண்டிக்க மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைத்தனர். ஒருங்கிணைப்புக்குழு தலைவரான கலெக்டர் வினீத் உத்தரவுப்படி, 3 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

திருப்பூரில் தொடர்ந்து, இதுபோன்று அடிக்கடி சோதனை நடத்தி, விதிமீறல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.

Similar News