கால்நடை மருத்துவமனை செயல்படும் நேரத்தில் மாற்றம் கூடாது; விவசாயிகள் வலியுறுத்தல்

தமிழகத்தில் கால்நடை மருத்துவமனை செயல்படும் நேரத்தில் மாற்றம் கூடாது என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Update: 2022-09-09 09:41 GMT

கால்நடை மருத்துவமனை செயல்படும் நேரத்தில் மாற்றம் கூடாது என, விவசாயிகள் வலியுறுத்தல்.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில், கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படுகின்றன. இவை, செயல்படும் நேரத்தை, வேலை நாட்களில் காலை 8 மணிமுதல், மதியம் 2 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல், மதியம் 12 மணி வரையும் செயல்படும் வகையில், நேரத்தை மாற்றி அமைக்க ஆலோசனை நடக்கிறது. அதற்காக உடுமலை கால்நடைபராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மதுசூதனன், துணைச்செயலாளர் பரமசிவம் ஆகியோர் கொடுத்த மனு:

விவசாயத்தொழிலாளர்களும், விவசாய பணிகளுக்கு காலை 7 மணிக்கு சென்று விட்டு, மதியம் 2 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். அதன் பின்பு தங்களது கால்நடைகளை பராமரிக்கும் பணிகளை செய்வார்கள். இந்நிலையில், கால்நடை மருத்துவமனை செயல்படும்  நேரத்தை மாற்றுவது எந்தவித பயனும் இல்லாமல் போய்விடும். மாலை 3 மணிமுதல் 5 மணிவரை யாராவது ஓரிருவர் சென்றாலும், மற்றவர்கள் மருத்துவமனையில் இருப்பது முதலுதவி செய்ய பயன்படும். மதியம் 2 மணியுடன் செயல்படும் நேரம் முடிவடைவதால் மறுநாள் காலை 8 மணிவரை, இடைவெளியில் எந்தவித கால்நடை மருத்துவ தேவையும் கிடைக்காது. எனவே,  தற்போது கால்நடை மருத்துவமனைகளின் செயல்படும் நேரத்தை மாற்றக்கூடாது. மேலும் அவசரத்தேவைகளுக்காக போன் எண் 1968 அழைத்தால், வரும் நடமாடும் மருத்துவ வாகனங்கள், போதுமான அளவில் இல்லை. அதை அதிகப்படுத்த வேண்டும் என,  மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Similar News