திருப்பூரில் பெண் வக்கீலுக்கு அரிவாள் வெட்டு; மகளும் படுகாயம்

திருப்பூரில் அரசு பெண் வக்கீல் மற்றும் அவரது மகளை, வாலிபர் அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த இருவரும், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Update: 2022-09-18 18:09 GMT

திருப்பூரில் பெண் வக்கீல் மற்றும் அவரது மகளை, அரிவாளால் வெட்டிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜமீலா பானு (வயது 40). இவர் திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில், அரசு வக்கீலாக உள்ளார். இவருடைய மகள் நிஷா (21). இவர் சேலம் அரசு சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று ஜமீலா பானு திருப்பூர் குமரன் ரோட்டில் தனியார் வணிக வளாகத்தில் உள்ள தன்னுடைய வக்கீல் அலுவலகத்தில் இருந்தார். அவருடன், மகள் நிஷாவும் அங்கு இருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென ஜமீலா பானுவின் அலுவலகத்திற்குள் நுழைந்தார். பின்னர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜமீலா பானு, நிஷா ஆகியோரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த இருவரும் வலி தாங்க முடியாமல் அலறினர். அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து,  திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து, அங்குவந்த போலீசார் படுகாயங்களுடன் வலியால் துடித்துக் கொண்டிருந்த ஜமீலா பானு, அவருடைய மகள் நிஷா ஆகியோரை, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சேலத்தில் நிஷா படிக்கும் அரசு சட்டக் கல்லூரியில், ஏற்கனவே படித்த திருப்பூர் பெரியதோட்டம் பகுதியை சேர்ந்த ரகுமான் கான் (25) என்பவர், நிஷாவுக்கு இடையூறு செய்துள்ளார். இதனால், சேலம் கொண்டாலம்பட்டி போலீசில் ரகுமான் கான் மீது, நிஷா புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த போலீசார், ரகுமான்கானை கைது செய்தனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு, ரகுமான்கான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ரகுமான் கான் நேற்று, திருப்பூரில் அலுவலகத்தில் இருந்த நிஷா மற்றும் அவருடைய தாய் ஜமீலா பானு ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பி சென்ற ரகுமான்கானை, போலீசார் தேடி வருகின்றனர். 

Similar News