போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட நான்கு பேர் திருப்பூரில் கைது

திருப்பூர் அருகே அ.தி.மு.க. நிர்வாகியை காரில் கடத்த முயன்ற, சென்னையைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட நான்கு பேரை, பெருமாநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-25 05:55 GMT

போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட நான்கு பேர், திருப்பூரில் கைது.

திருப்பூரை அடுத்த அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 45). இவர் அ.தி.மு.க. திருப்பூர் ஒன்றிய பாசறை செயலாளர். இவருடைய மனைவி சங்கீதா, மாநகர் மாவட்ட இணை செயலாளராக உள்ளார். சந்திரசேகர் அப்பகுதியில், பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். நேற்று மதியம், சந்திரசேகர் வீட்டில் இருந்தபோது கார்த்திகேயன் என்பவர் வந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் அழைப்பதாக கூறியுள்ளார். உடனே, சந்திரசேகர் வெளியே வந்து பார்த்தபோது, வீட்டுக்கு முன் நின்ற காரில் போலீஸ் சீருடையில் ஒருவர் இருந்துள்ளார்.

'போலீஸ் கமிஷனரிடம், உங்கள் மீதான புகார் உள்ளது,' என்று அந்த நபர், சந்திரசேகரை அழைத்துள்ளார்.  'பெருமாநல்லூர் பகுதிக்கு, போலீஸ் எஸ்.பி.,க்குதான் என்னை பற்றிய புகார் செல்லும்,' என்று சந்திரசேகர் வர மறுத்துள்ளார். உடனே சந்திரசேகரை, கார்த்திகேயன் வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளியுள்ளார். சத்தம் போடாமல் காருக்குள் ஏறுமாறு மிரட்டியுள்ளனர்.

அப்போது காருக்குள் கணக்கம்பாளையத்தை சேர்ந்த ரத்தினராஜ் என்பவர் இருந்துள்ளார். சுதாரித்துக்கொண்ட சந்திரசேகர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்தவர்கள்,  காருக்குள் இருந்த நான்கு பேரையும் பிடித்து, பெருமாநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், பிடிபட்டவர்களில் ஒருவர் சென்னை செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த அன்பழகன் (52) , அவர்  சென்னை தலைமை செயலகத்தில், தொழில்நுட்ப பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதும் தெரியவந்தது. அவருடன் வந்தவர்கள் கணக்கம்பாளையத்தை சேர்ந்த மளிகைக்கடைக்காரர் ரத்தினராஜ் (33), மேகலா (34), சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் (45) என்பதும் தெரியவந்தது. இதில் ரத்தினராஜூக்கும், சந்திரசேகருக்கும் இடையே ஏற்கனவே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது. இந்த பிரச்னை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில் ரத்தினராஜின் நண்பர் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் அன்பழகனை திருப்பூர் அழைத்து வந்து, இந்த கடத்தல் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ரத்தினராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், கார்த்திகேயன், மேகலா ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

Similar News