தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் ஆய்வு

தேசிய தூய்மைப்பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-03-15 16:00 GMT

 நெல்லையில் ஆய்வு மேற்கொண்ட தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன்

மாநில அளவில் தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்க வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் பணியமர்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும் என நெல்லையில் ஆய்வு மேற்கொண்ட தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் தேசிய தூய்மைப்பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள், தூய்மைப்பணியாளர்கள் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் துப்புரவு பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:தேசிய தூய்மை பணியாளர் ஆணையம் சார்பில் 5 நாள் பயணமாக தமிழகத்தில் ஆய்வு நடத்தி வருகிறோம், நேற்று கன்னியாகுமரியிலும், இன்று நெல்லையிலும் நடைபெற்றது. அனைத்து வகை துப்புரவு பணியாளர்களுக்கும் ஒரே சம்பளம் நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு தமிழகம் முழுதும் முறையாக ஊதியம், வைப்பு நிதி, இ.எஸ்.ஐ ஆகியவை சரிவர கிடைக்க முடியாத நிலை உள்ளதனால் தமிழக அரசு குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிடபட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதை முழுதுமாக ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது. ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் முறை குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்.

மாநில அளவில் துப்புரவு பணியாளர் ஆணையத்தை தமிழகத்தில் அமைக்கவேண்டும். மாநில அளவிலான ஆணையம் 9 மாநிலங்களில் இயங்கி வருகிறது. மாநில அளவில் தூய்மைப் பணியாளர்களின் பொருளாதரத்தை மேம்படுத்த மாநில அளவில் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைக்கவேண்டும். தமிழகத்தில் தூய்மை பணியாளர் நலவாரியம் செயல்பட்டு வருகிறது. நலவாரியம் என்பது ஜனநாயக ரீதியில் பெரியளவில் பயன் கிடைக்காது. கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுதும் துப்புரவு பணியாளர்களுக்கு 3 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ 1 கோடி இழப்பீடாக தூய்மை பணியாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என வெங்கடேசன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன், நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News