நெல்லை ஊரக உள்ளாட்சி தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை தாெடக்கம்

நெல்லையில் 2069 பதவிகளுக்கு இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.

Update: 2021-10-11 13:37 GMT

நெல்லையில் 2069 பதவிகளுக்கு இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் வாக்கியங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு. 2917 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, மானூர் உள்ளிட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்று முடிந்தது. முதற்கட்ட தேர்தலில் 70.36 %, இரண்டாம் கட்ட தேர்தலில் 69.34 % வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சம் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்தில் 74.76 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

தொடர்ந்து நாளை காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கிறது. இதற்காக ஒன்பது ஒன்றியங்களுக்கும் தலா ஒரு மையம் என மொத்தம் ஒன்பது வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு போலீசார் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக வாக்குச்சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் அந்தந்த மையங்களில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

நாளை காலை 8 மணிக்கு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன அறையின் சீல் உடைக்கப்பட்டு வாக்குச்சீட்டுகள் வெளியே எடுக்கப்படும். பின்னர் முகவர்கள், வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படவுள்ளது. இதையொட்டி 9 வாக்கு எண்ணும் மையங்களில் மொத்தம் 675 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 2917 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். நெல்லையில் மொத்தம் 2069 பதவிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதில் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேகமாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஆனால் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை முடிவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது. மொத்தம் 5522 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் வெற்றி பெரும் வேட்பாளர்கள் விரைவில் தங்கள் போட்டியிட்ட பதவிக்கான பொறுப்பு ஏற்க உள்ளனர். அதைத்தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர் ஒருவர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஒருவர், ஊராட்சி ஒன்றியக்குரு தலைவர் 9 பேர், துணைத் தலைவர் பதவிக்கு 9 பேர், கிராம ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு 204 பேர் என மொத்தம் 224 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற இருக்கிறது.

நாளை வாக்கு எண்ணும் மையங்களில் பிரச்சினைகள் எதுவும் நடைபெறாமல் தடுக்க மொத்தம் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags:    

Similar News