நெல்லையில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆணை: சபாநாயகர் வழங்கல்

மின் கட்டணத்தை உயர்த்தாமல் சாமானிய மக்கள் கேட்ட உடனே மின் இணைப்புகளை அரசு வழங்கி வருகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Update: 2021-10-19 04:18 GMT

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடந்த நிகழ்வில் பயனாளிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆணை, கருணை அடிப்படையில் பணி ஆணை ஆகியவற்றை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

மின் கட்டணத்தை உயர்த்தாமல் சாமானிய மக்கள் கேட்ட உடனே மின் இணைப்புகளை அரசு வழங்கி வருகிறது என நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடந்த நிகழ்வில் பயனாளிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆணை மற்றும் கருணை அடிப்படையில் பணி ஆணை ஆகியவற்றை வழங்கிய சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் வழங்குவதற்கான ஆணை மற்றும் மின்வாரியத்தில் பணியில் இருந்தபோது உயிர்நீத்தவர்களுக்கான வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணியாணை வழங்கும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 835 விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பில் முதல் கட்டமாக 42 நபர்களுக்கும், அதேபோல் பணியில் இருக்கும் போது உயிர் நீத்த மின் வாரிய ஊழியர்களின் வாரிசுகள் 14 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை ஆகியவற்றை சபாநாயகர் வழங்கினார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு பேசுகையில்:-

மின் வாரியத்தில் காலியாக உள்ள ஒயர்மேன், ஹெல்பர்கள் போன்ற பணியிடங்கள் தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் விரைவில் நிரப்பப்பட உள்ளது, கடந்த திமுக ஆட்சியில் ஏற்பட்ட மின்தடையை சரி செய்ய எண்ணூர், உடன்குடி உள்ளிட்ட பல மின் திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்ததன் காரணமாகத்தான் மின்தட்டுப்பாடு தற்போது சரிசெய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மின்சாரம் மிகையாக இல்லாத நிலையிலும் உடனடியாக புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

பல விமர்சனங்களை தாண்டி திமுக ஆட்சியில் இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 16 லட்சம் விவசாயிகளுக்கு மேல் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்ட போதிலும் காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே தான் உள்ளது, 4 லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகள் இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பம் செய்து காத்திருக்கின்றனர். இந்த நிலையை கலைந்திட திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் ஆண்டுக்கு ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் தயாரித்து அதனை செயல்படுத்தி வருகிறார். மின் கட்டணத்தை உயர்த்தாமல் சாமானிய மக்கள் கேட்ட உடனே மின் இணைப்புகளை அரசு வழங்கி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞானதிரவியம், தனுஷ். எம்.குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா, நயினார்நாகேந்திரன், மற்றும் மின் வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News