பள்ளி கட்டிட விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

பள்ளி விபத்து குறித்து பள்ளி தாளாளர் சகாய செல்வராஜ், தலைமையாசிரியர் ஞானசெல்வி, கட்டிட ஒப்பந்தகார் ஜான்கென்னடி ஆகியோர் கைது.

Update: 2021-12-17 16:16 GMT

பள்ளி கட்டிட விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் உடலுக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நெல்லை டவுண் சாப்டர் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் மாணவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மூன்று பேரின் உடலுக்கும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அரசு அறிவித்த நிவாரண உதவியையும் வழங்கினர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் , கட்டிட ஒப்பந்தகாரர் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

நெல்லை டவுண் சாப்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி இடைவேளையில் மாணவர்கள் சிறுநீர் கழிக்க சென்ற போது கழிப்பறை தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் விஸ்வரஞ்சன், சுதீஸ் மற்றும் அன்பழகன் ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் சஞ்சய், இசக்கிபிரகாஷ், சேக் அபுபக்கர்சித்திக் மற்றும் அப்துல்லா ஆகிய 4 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இறந்த மாணவர்களுக்கு தலா 10 லட்சமும் , காயம் அடைந்த மாணவர்களுக்கு 3 லட்சமும் அறிவித்தார். இந்த உதவித் தொகையை உடனடியாக வழங்குமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் ஆட்சியர் விஷ்ணு, சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். இதனிடையே இறந்த மாணவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களிடம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் உடலை வாங்க ஒப்புக்கொண்டனர். பின்னர் சபாநாயகர், அமைச்சர், ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மூன்று மாணவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறவினர்களிடம் 10 லட்சம் அரசின் நிவாரண உதவியையும் வழங்கினர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களையும் நேரில் சந்தித்து அவர்களின் உடல்நலம் விசாரித்ததுடன் பெற்றோர்களிடம் ஆறுதல் கூறினர்.

மேலும் விபத்து குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளரி்களுக்கு அளித்த பேட்டியில்:- நெல்லை பள்ளி விபத்து குறித்து தமிழக முதல்வர் உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்லுமாறு தனக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இங்கு வந்துள்ளளேன், பள்ளி விபத்து குறித்து பள்ளி தாளாளர் சகாய செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசெல்வி மற்றும் கட்டிட ஒப்பந்தகார் ஜான்கென்னடி ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . விசாரணை நடந்து வருகிறது.

மேலும் இதில் வேறு யாரும் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. காயம் அடைந்த 4 பேருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கட்டிட தரம் குறித்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பள்ளிக்கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து சாப்படர் பள்ளிக்கு இன்றுமுதல் மறுஉத்தரவு வரும் வரை பள்ளியை மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News