ஊர் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்

கடையம் அருகே ஊர் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடிகளைக் கட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-23 00:48 GMT

ஊர் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தில் கருப்பு கொடிகளைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்தின் கீழ் வெய்காலிபட்டி, மேட்டூர், ஆசீர்வாதபுரம், கானாவூர் உள்ளிட்ட சிறிய கிராமங்கள் உள்ளது.

இதில் மேட்டூரின் ஒரு பகுதியை சபரிநகர் என்று பெயர் மாற்றம் செய்ய திமுக ஊராட்சி தலைவர் பொன்ஷீலா பரமசிவன் ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது. ஊராட்சி செயலர் மூலம் மேட்டூர் பகுதிக்கு சபரிநகர் என்று வீட்டு தீர்வை ரசீது அடித்து வருகின்றனர். இதனை கண்டித்து மேட்டூர் பொதுமக்கள் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து இன்று தங்களது வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள், பொது இடங்களில் கருப்பு கொடி கட்டி இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து மேட்டூர் பரி. திரித்துவ ஆலயம் முன்பு திரண்டு கறுப்பு பேட்ஜ் அணிந்து அறவழி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக ஊர் மக்கள் மயானத்தில் குடியேறி ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையொட்டி 2 முறை சிறப்பு கிராம சபை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. 3-வது முறையாக நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கையெழுத்திடாமல் புறக்கணித்து சென்றனர்.

இது தொடர்பாக ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று ஆசீர்வாதபுரம் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தையும் புறக்கணித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அதிரடிப்படை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News