கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!

கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்- தமிழக, கேரளா எல்லையான புளியரை வாகன சோதனை சாவடியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-23 14:25 GMT

பட விளக்கம்: புளியரை சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் இயங்கி வரும் சில கோழிப் பண்ணைகளில் அதிக அளவிலான வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அவற்றை ஆய்வு செய்த போது எச்5 என்1 என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அம்மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழக எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்திரவிடப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டம், தமிழக- கேரளா எல்லை பகுதியான புளியரை பகுதியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தற்போது சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்ட பறவையினங்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள் தமிழகத்திற்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோழிகளை கேரளாவில் இறக்கிவிட்டு மீண்டும் தமிழகம் நோக்கி வரும் வாகனங்கள் முறையான சுத்தமின்றி உள்ளே நுழைந்தால் அந்த வாகனங்களை கேரளாவிற்கு திருப்பி அனுப்பும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த பறவைக்காய்ச்சல் சோதனை சாவடியை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் ஆய்வு செய்து வருகிறார். மேலும், எல்லையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். 

மேலும், இது போன்ற தடுப்பு நடவடிக்கைகள் எல்லையில் தொடர்ந்து நடைபெறும் எனவும், பறவை காய்ச்சல் தொற்று தமிழக எல்லைக்குள் பரவாத வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Tags:    

Similar News