கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை: தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2012ம் ஆண்டு கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2022-04-12 04:15 GMT

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜ், துரை.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலங்காதகண்டி பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ராஜ்(81/22) மற்றும் அவரது மகன் துரை(49/22) ஆகியோரை பரமக்குடியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்வதற்கு அவரது ஓனரிடமிருந்து ரூ.10 ஆயிரம் வாங்கி கொடுத்துள்ளார்.

தந்தை மகன் இருவரும் பணத்தை வாங்கிக்கொண்டு வேலைக்கு வராமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கனகராஜ் இருவரிடமும் வேலைக்கு வாருங்கள் இல்லாவிட்டால் பணத்தை திருப்பிக் கொடுங்கள் என கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 31.10.2012 தேதி கனகராஜ் அவரது வீட்டின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ராஜ் மற்றும் துரை இருவரும் அரிவாளால் கனகராஜை வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கனகராஜ் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த  01.11.2012 ம் தேதி இறந்துள்ளார். இதுகுறித்து செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு. முனிஸ்வரன்  வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

இந்த வழக்கை தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அனுராதா விசாரணை மேற்கொண்டு மேற்படி கனகராஜை கொலை செய்த ராஜ் மற்றும் துரை ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் அபராதம் கட்ட தவறினால் கடுங்காவல் தண்டனை எனவும் தீர்ப்பளித்தார். வழக்கில் திறம்பட செயல்பட்ட அரசு வழக்கறிஞர் திரு. வேல்சாமி, செங்கோட்டை காவல் துறையினருக்கும் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்  தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Tags:    

Similar News