நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை: சோகத்தில் மூழ்கிய கிராமம்

சேர்ந்தமரம் அருகே உள்ள குலசேகரமங்கலம் கிராமத்தில் நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டதால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Update: 2022-09-02 08:57 GMT

ராஜலட்சுமி

தென்காசி மாவட்டம்,சுரண்டையை அடுத்துள்ள சேர்ந்தமரம் அருகில் உள்ள குலசேகரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அமல்ராஜ் -வெண்ணியார் தம்பதியினருக்கு ராஜலட்சுமி(21) என்ற மகளும் உதய ஜோதி(19) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.ராஜலட்சுமி கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு திருநெல்வேலியில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதியுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீட் தேர்வு முடிவுகள் 7ம்‌ தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கீ ஆன்சர் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிலிருந்து ராஜலட்சுமி சோகமாக காட்சி அளித்துள்ளார்.இந்த நிலையில் நேற்று தனது தாய் தந்தை இருவரும் வேலைக்கு சென்ற பின்பு தனது தாய் தந்தையின் கனவை நிறைவேற்ற முடியாத காரணத்தினால் தாயின் சேலையில் தூக்கு போட்டு ராஜலட்சுமி நேற்று மதியம் தற்கொலை செய்து கொண்டார்.

வேலைக்கு சென்று திரும்பிய பெற்றோர் ராஜலட்சுமி உடலைப் பற்றி கதறி அழுதுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் ராஜலட்சுமி உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நீட் தேர்வு தோல்வி  பயத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குலசேகரமங்கலம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராஜலட்சுமி சகோதரர் உதயஜோதி சென்னையில் உள்ள கல்லூரியில் ரத்த சுத்திகரிப்பு தொடர்பாக படித்து வருகிறார் என்று குறிப்பிடத்தக்கது. தற்கொலை குறித்து சேந்தமரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News