வடகிழக்கு பருவமழையின் போது பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழையின் போது பயிர்களை பாதுகாக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தோட்டக்கலை துறையினர் அறிவித்துள்ளர்.

Update: 2022-10-04 04:56 GMT

கோப்பு படம்

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயிர்களை பாதுகாப்பது குறித்து தோட்டக் கலைத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலை உள்ளதால் வடகிழக்கு பருவமழையினால் தோட்டக்கலை பயிர்களின் சேதத்தை குறைத்திட விவசாயிகள் கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.

பழப்பயிர்களில் அதிக சேதத்திற்குள்ளாகக்கூடிய வாழையில், காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க வாழை மரத்தின் அடிப்பகுதியைச் சுற்றி மண் அணைத்து கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி முட்டுக்கொடுக்க வேண்டும். மேலும், மரங்களைச் சுற்றிலும் நல்ல வடிகால் வசதி அமைத்து தண்ணீர் தேங்கா வண்ணம் பராமரிக்க வேண்டும்.

பல்லாண்டு பழ மரங்களான மா, கொய்யா, எலுமிச்சை, வாழை போன்ற பயிர்களில் காய்ந்த நோய் தாக்கிய இலைகள் மற்றும் கிளைகளை அகற்றி, கவாத்து செய்து போதிய காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் கிடைக்கும்படி செய்ய வேண்டும். அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்கவும்.

தக்காளி, கத்தரி வெங்காயம், மிளகாய் மற்றும் கொடிவகை காய்கறி பயிர்களுக்கு வேர்ப்பகுதியில் மழைநீர் தேங்கா வண்ணம் நல்ல வடிகால் வசதியினை ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் போன்ற பூஞ்சாண உயிரியல் கட்டுப்பாட்டு மருந்துகளை தெளித்து பயிர்களை பாதுகாக்க வேண்டும்.

பசுமைக்குடில், நிழல்வலைக்குடில்களின் அடிப்பாகம் நிலத்துடன் பலமாக இணைப்பு கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை சரி செய்து கொள்ள வேண்டும். மேலும் குடிலின் வாயிற்பகுதி (கதவு) காற்று உட்புகா வண்ணம் நன்றாக மூடி வைக்க வேண்டும்

மேலும் ராபி பருவத்தில் வாழை, வெங்காயம் மிளகாய் போன்ற தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.

கனமழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் சேதத்தை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஆய்வு செய்து முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். பின் வருவாய் துறையுடன் கூட்டாய்வு செய்து முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு தங்களது வட்டார தோட்டக்கலைத் துறையினரை அணுகி பயனடையலாம்

இதனை விவசாயிகள் பயன்படுத்தி தங்களது பயிர்களை பேரிடர் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு  தோட்டக்கலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தோட்டடக்கலைத் துறை சார்பில் வெளியிடப்பட்டள இந்த அறிப்பை விவசாயிகள் வரவேற்று உள்ளரனர். இந்த முறையை பின்பற்றினால் பயிர் சேதத்தை தவிர்க்கலாம். இதனால் வேளாண்மை வருமானத்தை அதிகரித்து கொள்ள வாய்ப்பாக இருக்கும் விவசாயிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News