குற்றாலத்தில் நான்கு நாட்கள் சாரல் திருவிழா நடத்த திட்டம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலா பகுதிகளை மகிழ்விக்க சாரல் திருவிழா நடத்துவது வழக்கம்.

Update: 2024-08-10 02:43 GMT

செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய குற்றாலத்தில் வருடம் தோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மூன்று மாத காலகட்டங்களில் மழைக்கால சீசன் களைகட்டுவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது மழைக்கால சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சீசனை முன்னிட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதிக்கு வருகை தந்து அருவிகளில் ஆனந்த குளியல் இட்டு வருகின்றனர்.

குறிப்பாக, மழைக்கால சீசன் காலகட்டங்களில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் வருடம் தோறும் குற்றால சாரல் திருவிழாவானது வெகு விமர்சையாக 10 நாட்கள் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், கடந்த வருடம் சீசன் காலகட்டங்களில் சாரல் திருவிழாவானது நடை பெறாத நிலையில், இந்த வருடம் சாரல் திருவிழாவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், வருகின்ற 16, 17, 18, 19 ஆகிய நான்கு தினங்களில் சாரல் திருவிழாவானது நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:

16 முதல் 19-ம் தேதி வரை குற்றால சாரல் திருவிழா நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. 4 நாட்கள் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

16 முதல் 18-ம் தேதி வரை ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News