கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் தென்காசி எம்.எல்.ஏ மனு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், நேற்று, மாவட்ட ஆட்சியரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: சுரண்டை அரசு பள்ளியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இப்பகுதியில் மீண்டும் தண்ணீர் தேங்காத வண்ணம் போர்க்கால அடிப்படையில் இரண்டடி உயரத்திற்கு மேல் மணலை நிரப்ப வேண்டும். புழல் ஏரி, குளம் நிரம்பி மறுகால் வழியாக அம்மையாபுரம், பொட்டல் குளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்தக் குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதை, ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளது. அதனை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்காசி அரசு மருத்துவமனையில் கொரானா காலத்தில் 13 உதவி செவிலியர்கள் பணியாற்றி வந்தனர். அவர்கள் கடந்த 31. 07. 21 அன்று பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 4 மாத காலமாக ஊதியம், ஊக்கத்தொகை வழங்கபடவில்லை அதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. மனு அளிக்கும் போது தென்காசி நகரத் தலைவர் காதர் மைதீன், தென்காசி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.