தென்காசி : மென்பொருள் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆய்வு

தென்காசி அருகே உள்ள மென்பொருள் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-06-14 13:48 GMT

தென்காசி அருகே உள்ள மென்பொருள் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை அருகே தனியார் மென்பொருள் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சோகோ நிறுவனம் தொழில்துறையில் உலகளாவிய அனுபவம் வாய்ந்தது. ஊரக பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பணித்திறன், ஆகியவற்றை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல் கிராமப்புற இளைஞர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு மேம்படுத்துவது என ஆய்வு மேற்கொண்டுள்ளேன்.

தமிழக அரசின் ஒவ்வொரு துறையும் மக்கள் நலனில் அக்கறை செலுத்தி பணி செய்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறை கடந்த 10 ஆண்டுகளில் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனை சரிசெய்ய நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் திறமையான இளைஞர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க மென்பொருள் நிறுவனங்களுடன் அரசு இணைந்து செயல்படும். ஐந்து வருடங்களில் எவ்வளவு அதிகமான வேலை வாய்ப்புகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்தித் தர முடியுமோ? அதற்கான திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல் மாணவ மாணவிகளுக்கு டேப் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மென்பொருள் நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு உட்பட அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News