வாகன சோதனையில் சிக்கிய வாலிபரிடம் தங்கம், வெள்ளி கட்டிகள் பறிமுதல்

Gold and silver bars seized from youth.

Update: 2022-10-12 14:30 GMT

தங்கம், வெள்ளி கட்டிகள் கடத்தல் வழக்கில் கைதானவருடன் போலீசார்.

தங்கம் என்றாலே பணக்காரன் முதல் ஏழை வரை அனைவருக்கும் விருப்பம். அதிலும் பெண்களிடம்  தனி சிறப்பிடம் உள்ளது. இந்தியா முழுவதும் ஆண்ட அரசர்கள் முதல் தற்போது இருக்கும் ஏழை வரை அனைவருக்கும் தங்கத்தின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. அந்தத் தங்கத்தை அரசு முறையாக வழங்கி வருகிறது ஆனால் சில நகை கடை வியாபாரிகள் சட்டத்துக்கு விரோதமாக கொண்டு வந்து தங்களது தொழிலை மேற்கொண்டு வருகிறார்கள்.

சட்டத்துக்கு புறம்பாக வெளி நாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் தங்கம் அவ்வப்போது விமான நிலையங்களில் பிடிபடுவது உண்டு. ஆனால் அது சொற்ப நிகழ்வுகள் மட்டுமே. அதையும் தாண்டி கடல் மார்க்கமாக இந்தியாவில் இரண்டு இடங்களில் தங்கம் சட்டத்துக்கு புறம்பாக கொண்டுவரப்படுகிறது. ஒன்று மும்பை. மற்றொன்று தமிழ்நாட்டில் உள்ள வேதாரண்யம்.

இதனை ஓய்வு பெற்ற ஒரு காவல் உயர் அதிகாரி செய்து வருகிறார். தற்போது ஒரு கிலோ தங்கம் என்ன விலை, அதற்கான முழு தொகையும் அவரிடம் கொடுக்க வேண்டும். அவர் அதில் இருந்து பாதி தொகைக்கான தங்கத்தை மட்டுமே திருப்பித் தருவார். மேலும் வேறு ஏதேனும் வழக்கில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக அந்த பணம் முன்பணமாக வைத்துக் கொள்ளப்படுகிறது. தொடர்ந்து அவரிடம் தொழில் செய்தால் மட்டுமே முழு தொகையும் திரும்ப பெற முடியும். இது அவரிடம் எழுதப்படாத சட்டம். இது போன்ற ஒரு நிகழ்வு தென்காசி மாவட்டத்தில் நடந்துள்ளது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர், சங்கரன்கோவில், நெல்லை மாவட்டம், திருநெல்வேலி பகுதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூர் நல்ல மேய்ப்பான் நகர்,  துர்கா அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தங்கச் செல்வம்(45) என்பவர் நகைக்கடைகளுக்கு தங்க நகைகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவ்வாறு கடந்த நான்கு ஆண்டுகளாக கடையநல்லூரில் உள்ள பிரபல நகை கடைக்கு தங்கங்களை விற்பனை செய்வது வழக்கம்.

கடந்த வாரம் வங்கி மூலம் 58 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒரு கிலோ 132 கிராம் தங்க கட்டிகளை கொடுக்காமல் மோசடி செய்தனர். இதுகுறித்து அந்தக் கடையின் உரிமையாளர் கடையநல்லூர் சந்தை தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் மக்தும் என்பவர் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து கடையநல்லூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி செய்த நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை அன்று கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி அச்சம்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது வேகமாக வந்த காரை மறித்து சோதனை செய்த போது  மோசடி செய்த தங்கச்செல்வம் சிக்கினார். அவரை  மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்.  அப்போது அவரின் காரில் இருந்து இருந்து ஒரு கிலோ 523 கிராம் தங்கநகையையும் ஒரு கிலோ 966 கிராம் வெள்ளி நகையையும் இரண்டு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் ரொக்கபணத்தையும்  கைப்பற்றினர். விசாரணையில் மேலும் இரண்டு சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து மதுவிலக்கு டி.எஸ்.பி. சுப்பையா செய்தியாளர்களிடம் கூறியது: மொத்த நகை வியாபாரம் செய்து வந்த தங்கச்செல்வம் பல ஆண்டுகளாக கடையநல்லூர் உட்பட பல்வேறு பகுதிகளில் நகை வியாபாரிகளுக்கு மொத்தமாக  தங்க கட்டிகள், வெள்ளியை விற்பனை செய்து வந்துள்ளார். அவரின் தொழிலில் நஷ்டம் ஏற்படவே பணத்தைப் பெற்றவர்களுக்கு திரும்ப நகை கொடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

இதனால் கடைசியாக கடையநல்லூரில் உள்ள பிரபல நகைக்கடையில் 58 லட்சம் ரூபாயை  பெற்றுக் கொண்டு அதற்கான நகையை கொடுக்க முடியாமல் ஏமாற்றி வருகிறார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நகை வியாபாரி கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் தான் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படையினர் தங்கச்செல்வத்தை மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்த தங்கம், வெள்ளி, இரண்டு சொகுசு கார்கள், இரண்டு லட்சம் ரூபாய்  ஆகியவற்றை மீட்டு தங்கச்செல்வத்தை கைது செய்தனர்.

இதுபோன்று திருநெல்வேலியில் உள்ள ஓர் நகைக்கடை உரிமையாளர் சையது காதர் என்பவருக்கும் தங்க கட்டிகளை இவர் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து திருநெல்வேலி மாநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. அது போன்று சங்கரன் கோவிலிலும் ராதாகிருஷ்ணன் என்பவர் இவர் மீது கொடுத்த புகாரின் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர்  கூறினார். 

தற்போது பிடிபட்ட நபர் வெறும் கருவி மட்டுமே. இவரைப் போன்று தென் மாவட்டத்தில் பலர் உள்ளனர். இந்த தங்க வியாபாரம் விஷயமாக கொலைகள் கூட நடந்துள்ளது. சமீபத்தில் சங்கரன்கோவில் பகுதியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தங்கம் வாங்க சங்கரன்கோவில் பகுதிக்கு வந்துள்ளார். அவரை கொலை செய்து சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளது. மும்பைக்கு அடுத்தப்படியாக சட்டவிரோதமாக பெரிய அளவில் தங்க வியாபாரம் தென் மாவட்டத்தில் நடக்கிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Tags:    

Similar News