பழனி நாடார் எம்.எல்.ஏ. வின் டிராக்டர் மோதி குழந்தை உயிரிழப்பு

தென்காசி அருகே பழனி நாடார் எம்.எல்.ஏ.விற்கு சொந்தமான டிராக்டர் மோதி குழந்தை உயிரிழந்தது.

Update: 2022-11-24 12:09 GMT

தென்காசிமாவட்டம் சுரண்டையில் பழனிநாடார் எம்.எல்.ஏ.விற்கு சொந்தமான டிராக்டர் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் குளத்து சரல் மண்,   மக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக டிராக்டர்களில் கொண்டு செல்லப்படுகிறது. இந் நிலையில் நேற்று இரவு கீழ சுரண்டை பிள்ளையார் கோவில் தெருவில்  டிராக்டர் வாகனம் சென்று கொண்டிருக்கும்போது தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த கீழ சுரண்டை தங்கராஜ் என்பவரின் பேரனும் ராஜதுரை என்பவரின் மகனுமாகிய நான்கு வயது சிறுவன் ராஜ முகன் என்பவரின் மீது டிராக்டரின் முன்பக்க டயர் மற்றும் இஞ்சின் பகுதி ஏறி இறங்கியதில் சிறுவன் ராஜ முகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து  டிராக்டர் ஓட்டுனர் பாக்கியசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் இந்த வாகனம் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு சொந்தமானது என தெரிய வந்தது . இறந்த குழந்தையின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இன்று அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் இறந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர்களது குடும்பத்தினர் எங்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும். இப்பகுதியில் வேகதடை அமைத்து வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இறந்த குழந்தையின் குடும்பத்தில் உள்ள தகுதி உள்ள நபருக்கு அரசு வேலை பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினரிடம் எடுத்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து பழனிநாடார் எம்.எல். ஏ.6லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்கினார். மேலும் வாகனம் மோதி குழந்தை இறந்ததால் இன்சூரன்ஸ் தொகையை முழுவதுமாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கின்றேன் என்று உறுதி அளித்தார். பின்னர் அந்த குழந்தையின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சந்தோஷ், மாவட்ட பொதுச் செயலாளர் காஜாமைதீன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News