வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கோளாறு

Update: 2021-04-13 06:15 GMT

தென்காசியில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள சிசிடிவி காட்சிகள் 4 நிமிடம் தடைபட்டதற்கான விளக்கம் கேட்டு மாவட்ட கலெக்டரிடம் தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மனு அளித்துள்ளனர்.

தென்காசி மாவட்ட கலெக்டரிடம் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் தலைமையில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது : தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் கொடிக்குறிச்சியிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 4 நிமிடம் கண்காணிப்பு அறையிலுள்ள டிவியில் ஸ்ட்ராங் ரூமில் கரண்ட் கட் ஆனது தெரிந்துள்ளது.

ஆனால் கண்காணிப்பு அறையில் மின்சாரம் தடைபடவில்லை.ஸ்ட்ராங் ரூமில் உள்ள 8 சிசிடிவி கேமராக்களுக்கும் இன்வெட்டர் லைன் கொடுத்து அதனையும் கண்காணிப்பு அறையுடன் இணைத்து விட்டால் தவறு நடக்காமலும், மின்சாரம் தடைபடாமலும் செய்து விடலாம் என்று கருதுகிறோம். எனவே இதற்கு உரிய ஏற்பாடும், நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என அம்மனுவில்கேட்டுக் கொண்டுள்ளனர்.

பின்பு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது : நேற்று இரவு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் காட்சிகள் 4 நிமிடம் தடைபட்டது குறித்து விளக்கம் கேட்டுள்ளோம். அதற்கு ஓரிரு தினங்களில் வேட்பாளர்கள் அல்லது முகவர்கள் முன்னிலையில் அதற்கான விளக்கம் தரப்படும் என்று கூறியதாக தெரிவித்தார்.

பேட்டியின் போது மதிமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, தென்காசி தொகுதி வேட்பாளர் பழனிநாடார், சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ராஜா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாமித்துரை, உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News