ஆலங்குளம் அருகே ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை - காவல்துறை விசாரணை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த ரெட்டியார்பட்டியில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை- பதற்றம் போலீஸ் குவிப்பு

Update: 2020-12-15 15:27 GMT

தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலங்குளம் அடுத்த ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் இசக்கித்துரை(37) ஆட்டோ டிரைவர். மனைவி சொர்ணமதி. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இன்று (நேற்று) மாலை ஆட்டோடிரைவர் இசக்கிதுரை வீட்டில் இருந்தபோது ஒருவர் அவரது வீட்டிற்கு வந்து சவாரிக்கு அழைத்துள்ளார். வீட்டில் இருந்து புறப்பட்டு ரெட்டியார்பட்டி ஊத்துமலை ரோட்டில் ஆட்டோவில் வந்தபோது அந்த நபர் ஆட்டோவை நிறுத்தும்படி கூறியுள்ளார். நண்பர் ஒருவரை ஆட்டோவில் ஏற்றி செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஆட்டோவை ஓரமாக இசக்கிதுரை நிறுத்திய போது அங்கு மறைந்திருந்த கும்பல் ஆட்டோ டிரைவரை வெட்ட முயன்றது. சுதாரித்துக்கொண்டு அவர் அங்கிருந்து தப்பி தெருவில் உள்ள ஒரு புதிய கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளார். அங்கு புகுந்த அந்த கும்பல் இசக்கிதுரையை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துமலை காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டாரா? தொழில் போட்டியின் காரணமாக கொலை நடைபெற்றதா இல்லை வேறு காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.. தப்பி ஓடிய கும்பலை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.. ரெட்டியார்பட்டி யில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Similar News