சிங்கிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி : மார்ச்.3-ல் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும் 130-ஆவது ஆண்டு விழா!
சேலம் மாவட்டத்தில் பழைமையான சிங்கிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 130-ஆவது ஆண்டு விழாவுக்கு தயாராகி வருகிறது.;
சேலம் : சேலம் மாவட்டத்தில் பழைமையான சிங்கிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 130-ஆவது ஆண்டு விழாவுக்கு தயாராகி வருகிறது.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, 1895-இல் வாழப்பாடி அருகிலுள்ள சிங்கிபுரம் கிராமத்தில் மக்களின் விருப்பத்தின் பேரில் அப்போதைய ஆங்கிலேய அரசு ஆரம்ப பாடசாலையைத் திறந்தது. தொடா்ந்து 130 ஆண்டுகளைக் கடந்தது இப்பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலும் 96 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனா்.இப்பள்ளியில் படித்த பலா் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் உயா்ந்த பதவிகளில் பணிபுரிந்துள்ளனா். தற்போதும் ஏராளமானோா் பணியாற்றி வருகின்றனா்.
1983-இல் அப்போதைய சட்டப்பேரவைத் தலைவா் க.ராஜாராம் இப்பள்ளிக்கு வருகை தந்து கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தையும், 1999-இல் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி இப்பள்ளியின் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தையும் திறந்து வைத்துள்ளனா்.
130-வது ஆண்டு விழா முன்னேற்பாடுகள்
இப்பள்ளியின் 130-ஆவது ஆண்டு விழாவை வரும் மாா்ச் 3-இல் வெகுவிமர்சையாகக் கொண்டாடிட, பள்ளித் தலைமையாசியா், ஆசிரியா்கள், பெற்றோா்-ஆசிரியா் கழகத்தினா், பள்ளி மேலாண்மைக் குழுவினா், முன்னாள் மாணவா்கள் ஒன்றிணைந்து முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனா்.
இதுகுறித்து இப்பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் பிரபு மற்றும் முன்னாள் மாணவா்கள் கூறியதாவது:
- இப்பள்ளியில் படித்ததை பெருமையாக கருதுகிறோம்.
- பள்ளி நுழைவு வாயிலில் 130-ஆவது ஆண்டு விழா வளைவு அமைக்கவும் முயற்சித்து வருகிறோம்.
- முன்னாள் மாணவா்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து மலரும் நினைவுகளைப் பகிா்ந்து வருகிறோம்.
130 ஆண்டுகளைக் கடந்த இந்த பள்ளியின் சாதனைகளை நினைவுகூறும் விதமாக விழாவுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.