வாலாஜாவில் விதை நெல் கிடங்கு அமைக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

வாலாஜாப்பேட்டையில் உள்ள விதை நெல் சுத்திகரிப்பு நிலையத்தில், கிடங்கு மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று, விவசாயிகள் சங்கத்தினர் அமைச்சர் காந்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2021-07-04 02:50 GMT

வாலாஜாப்பேட்டை  உள்ள விதை நெல் சுத்திகரிப்பு நிலையத்தில் கிடங்கு மற்றும் சுற்றுச்சுவர் வசதி கோரி, அமைச்சர் காந்தியிடம் மனு அளித்த விவசாயிகள் சங்கத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம், சோளிங்கர்,நெமிலி, காவேரிப்பாக்கம், வாலாஜாப்பேட்டை, ஆற்காடு, திமிரி ஆகிய இடங்களில், வட்டார வேளாண் வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. அத்துடன், நெமிலி, வாலாஜாப்பேட்டை ஆகியவற்றில்,  விவசாயிகள் உற்பத்தி செய்து கொண்டு  வரும் விதைநெல்லை சுத்திகரித்து வழங்கும்  விதைநெல் சுத்திகரிப்பு நிலையங்களை வேளாண் துறை இயக்கி வருகிறது.

இதில், வாலாஜாப்பேட்டையில் செயல்பட்டு வரும் விதைநெல் சுத்திகரிப்பு நிலையம்,  பல ஆண்டுகளாக இயங்காத நிலையில்,  பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது. இருப்பினும், சுத்திகரிப்பு  நிலையம் சுற்றுச்சுவரின்றி பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது.

மேலும்,  சுத்திகரிக்க விதை நெல்லை வைக்க முறையான கிடங்குகள் இல்லாமல் விவசாயிகள்,  நிலையத்திலேயே நீண்ட நாள் காத்திருக்க வேண்டியதாய் உள்ளது. இதனால் அவர்கள்    திட்டமிட்டபடி நெல்லை விதைக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். 

வாலாஜாப்பேட்டையில் செயல்பட்டு வரும் விதைநெல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கிடங்கு, சுற்றுச்சுவர் அமைக்கக்கோரி சம்பந்தபட்டத் துறை உயரதிகாரிகளிடம் விவசாயிகள் சங்கத்தினர்  பலமுறை மனு அளித்தும் பலனில்லை.

இந்த நிலையில், தமிழக விவசாயிகள் சங்க மாநில இளைஞர் தலைவர் சுபாஷ், ரவிந்தரன், மாவட்ட தலைவர் மணிமா,  கௌரவத் தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர், தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தியை , ராணிப்பேட்டை அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினர்.

Tags:    

Similar News