தண்டவாள பராமரிப்பு; மதுரை-செங்கோட்டை ரயில் செப்.30 வரை ரத்து

Rail Track Maintenance -தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், வரும் 30ம் தேதி வரை, மதுரை - செங்கோட்டை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-09-15 06:56 GMT

தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக, வரும் 30ம் தேதி வரை, மதுரை - செங்கோட்டை ரயில் ரத்து.

Rail Track Maintenance -மானாமதுரை-மேல கொன்னகுளம், திண்டுக்கல்-அம்பாத்துரை, ராஜபாளையம்-சங்கரன்கோவில், சூடியூர்-பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில் நாளை (16-ம்தேதி) முதல் வரும் 30-ம்தேதி வரை வியாழன் தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக, மதியம் 1.30 மணிக்கு புறப்படும். அதேபோல மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு பதிலாக, மதியம் 1.10 மணிக்கு புறப்படும். திருச்சி-மானாமதுரை பயணிகள் ரயில், இரு மார்க்கங்கங்களிலும் வருகிற 17-ந்தேதி முதல் 22-ந்தேதிகள் வரை ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சிவகங்கை-மானாமதுரை இடையே, பகுதியாக ரத்து செய்யப்படும். திண்டுக்கல்-அம்பாத்துரை இடையே பராமரிப்பு பணி காரணமாக நாளை (16-ம்தேதி) முதல் வருகிற 30-ம்தேதி வரை கோவை-நாகர்கோவில் விரைவு ரயில் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். இதே போல சென்னை-குருவாயூர் விரைவு ரயில் மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய், சனிக்கிழமைகளில் 70 நிமிடம் தாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படும். இதனால் அந்த 3 நாட்களும் குருவாயூர் விரைவு ரயிலுக்கு, வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி பாசஞ்சர், இணைப்பு ரயிலாக செயல்படாது.

ராஜபாளையம்-சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பலப்படுத்தும் பணி நடக்கிறது. மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரயில் மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும். மதுரை பயணிகள் ரயில் ஆகியவை நாளை (16-ம்தேதி) முதல் வருகிற 30-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

கோவில்பட்டியில் வருகிற 21, 22-ம் தேதிகளில் பராமரிப்பு பணி காரணமாக, பாலக்காடு-திருச்செந்தூர் விரைவு ரயில் இரு மார்க்கங்களிலும் சாத்தூர்-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. குமாரபுரம் பராமரிப்பு பணிகளுக்காக வருகிற 28, 29-ம் தேதிகளில் பாலக்காடு-திருச்செந்தூர் ரயில் இரு மார்க்கங்களிலும் கோவில்பட்டி-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதுவும் தவிர இந்த ரயில்கள் வருகிற 30-ம் தேதி மதுரை-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் பாலக்காடு செல்லும் ரயில், மதுரையில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும். தென்காசி-செங்கோட்டை இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடப்பதால், வருகிற 20-ம் தேதி முதல் 30-ம் தேதி தேதிகள் வரை மதுரையில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரயில் மற்றும் நெல்லையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரயில் தென்காசி-செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இத்தகவலை மதுரை கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது. 



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News