3 முறை வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் 4வது முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல்

பெரம்பலூரில் கடைசி மூன்று தேர்தல்களிலும் சுயேட்சையாக வெற்றி பெற்ற ரமேஷ்பாண்டியன், நான்காவது முறையாக இன்று வேட்புமனுதாக்கல் செய்துள்ளார்.

Update: 2022-01-31 17:45 GMT

வேட்புமனு தாக்கல்.

பெரம்பலூர் மதனகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் பாண்டியன். 7 ஆம் வகுப்பு வரை படித்துள்ள ரமேஷ் பாண்டியன் பெரம்பலூர் நகராட்சியில் 14 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2001, 2006, 2011 ஆகிய மூன்று தேர்தல்களிலும் களமிறங்கி வெற்றியும் பெற்றார். பிரதான அரசியல் கட்சிகளுக்கு கடந்த மூன்று உள்ளாட்சி தேர்தல்களிலும் சிம்மசொப்பனமாக திகழ்ந்த சுயேட்சை வேட்பாளர் ரமேஷ் பாண்டியன், தற்போது நான்காவது முறையாக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தற்போது அவர் 5 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல் பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டு உறுப்பினர் பதவிக்கு பெரம்பலூர் நகர விஜய்மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி தலைவி சங்கீதா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மேலும் ஐந்தாவது வார்டில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர் சத்யா என்பவர் மிதிவண்டியில்  வந்து வேட்புமனுதாக்கல் செய்துள்ளார். இதுவரை பிரதான அரசியல் கட்சியினர் யாரும் பெரம்பலூர் நகர்மன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்யவில்லை. குரும்பலூர், லெப்பகுடிகாடு, அரும்பாவூர், பூலாம்பாடி ஆகிய நான்கு பேரூராட்சிகளிலும் அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் இதுவரை வேட்புமனுதாக்கல் செய்யவில்லை.

Tags:    

Similar News