பிடிவாரண்ட் தாசில்தார் விடுப்பு: சான்று பெற முடியாமல் மக்கள் கடுப்பு

கோர்ட் பிடிவாரண்ட்டில் இருந்து தப்ப, நாமக்கல் தாசில்தார் விடுப்பில் சென்றார். இதனால், சான்றுகள் பெற முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

Update: 2021-12-22 02:30 GMT

தமிழகம் முழுவதும், 1984ம் ஆண்டு, வருவாய் துறையினரால் நிலம் வரையறை செய்யப்பட்டது. அப்போது, நாமக்கல் அருகே, வேட்டாம்பாடியில் ஒன்னறை ஏக்கர் நிலம், கல்லாங்குத்து புறம்போக்கு என, வருவாய் துறையினரால் வரையறை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலத்துக்கு, அனுபவத்தின் அடிப்படையில் பட்டா வழங்க வேண்டும் என, தனிநபர் ஒருவர் 2007ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாமல், நாமக்கல்லில் தாசில்தாராக பொறுப்பேற்றவர்கள் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் பொறுப்பேற்ற தாசில்தார் திருமுருகனும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையொட்டி நாமக்கல் மாவட்ட உரிமையியல் கோர்ட் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. இதற்கிடையில்,  தாசில்தார் திருமுருகன் விடுமுறையில் சென்று விட்டார். கடந்த, 10 நாட்களாக நாமக்கல் தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் இல்லாததால், அரசு கோப்புகள்தேக்கம் அடைந்துள்ளன.

குறிப்பாக பொதுமக்கள் விண்ணப்பித்துள்ள சாதி, வருமானம் மற்றும் வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தாசில்தார் கையெழுத்திட்டால் மட்டுமே, இவற்றை வழங்க முடியும் என்பதால், நாமக்கல் தாசில்தார் அலுவலகத்துக்கு, தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்துவிட்டு, தாசில்தார் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News