மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு முழுவதையும் அரவை செய்ய கோரிக்கை

விவசாயிகளின் கரும்பு முழுவதையும் அரவை செய்யும் வரை அரவையை நிறுத்தக் கூடாது என்று கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-03-07 10:30 GMT

பைல் படம்.

இது குறித்து மோகனூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் மணிவண்ணன், பொதுச்செயலாளர் மணிவேல் ஆகியோர், ஆலையின் நிர்வாக இயக்குனருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2021-22ம் ஆண்டிற்கான கரும்பு அரவைப்பருவம் நடந்து கொண்டுள்ளது. கடந்த மார்ச் 1ம் தேதி நிலவரப்படி ஆலைக்குப்பதிவு செய்துள்ள விவசாயிகளிடம் இருந்து 38 ஆயிரம் டன் கரும்பு இன்னும் வெட்டி அரவை செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கரும்பு வெட்டுக்கூலி அதிகரித்து ஒரு டன்னுக்கு ரூ.1,400க்கு மேல் வழங்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் ஆலைக்கு பதிவு செய்துள்ள கரும்பில் 38 ஆயிரம் டன் வெட்டாமல் உள்ளது. தற்போது, ஆலையின் அரவையை நிறுத்தினால், கரும்பை வெளி ஆலைகளுக்கு அனுப்பிய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

வெளி ஆலைகளுக்கு கரும்பை அனுப்பினால் வெட்டுக்கூலி, லாரி வாடகை போன்றவை அதிகரிப்பதுடன், கரும்பு காய்ந்து மகசூல் குறையும் அபாயம் உள்ளது. வெளி ஆலைகளுக்கு கரும்பு அனுப்பும்போது, மோகனூர் ஆலைக்கும் நஷ்டம் ஏற்படும், விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்படும். எனவே விவசாயிகளிடம் பதிவு செய்து நிலுவையில் உள்ள 38 ஆயிரம் டன் கரும்பு முழுவதையும் வெட்டி அரவை செய்யும் வரை ஆலையின் அரவைப் பருவத்தை நீட்டிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News