நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்ப வேண்டும்: ராமகிருஷ்ணன்

நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2022-05-02 00:00 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற மே தின விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ராமகிருஷ்ணன், கட்சிக்கொடியேற்றி வைத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மே தின கொடியேற்று விழா, நாமக்கல்லில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில், வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, வரும் 6ம் தேதி, தமிழகம் முழுவதும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மனு தரும் போராட்டம் நடத்தப்படும். கடந்த 3 ஆண்டுகளில், பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை, தனி நபர் மீது செலுத்தி, 8 லட்சம் கோடி ரூபாய் வருவாயை மத்திய அரசு ஈட்டியுள்ளது. அதனால், கூடுதல் வரியை, மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

பல்கலை துணை வேந்தர்களை, மாநில அரசு நியமனம் செய்ய கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். நீட் விவகாரத்தில், கவர்னர் தபால்காரர் போலவே செயல்படுகிறார். எனவே, காலம் தாழ்த்தாமல், நீட் விலக்கு மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலை மற்றும் நூற்பாலைகளில், சிறுவர்கள் பணியில் அமர்த்துப்படுவதை தடுக்க வேண்டும். கொத்தடிமைகள் பணி அமர்த்துவதை தடுக்க, மாநில அரசு உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News